இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியது மத்திய அரசு... சர்க்கரை விலை உயர்கிறது!
டெல்லி: சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15-லிருந்து 40 சதவீதமாக உயர்த்துவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ 3 முதல் 5 வரை உயர்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கேபினட் செயலர் அஜித் சேத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிப்பது என்றும், சர்க்கரை வர்த்தகத் துறைக்கு ஆறுதலளிக்கும் வகையில், ஏற்றுமதி மானியத்தை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கரும்பாலைகளுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.4,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சர்க்கரை உற்பத்தியின்போது வெளிவரும் உபரிப் பொருளான எத்தனாலை, பெட்ரோலுடன் 5 சதவீதம் வரை கட்டாயம் கலக்கும் திட்டத்தை அமல்படுத்துவது, இதை மேலும் 10 சதவீதம் வரை கலப்பதற்கான முயற்சியை மேற்கொள்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன,' என்றார்.
சர்க்கரை விலை உயர்வு
அரசின் இந்த முடிவை அடுத்து, மொத்த சந்தையில் சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.60 வரை அதிகரித்தது. தலைநகர் டெல்லியில் எம்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,270 முதல் ரூ.3,400 வரை இருந்தது.
எஸ்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,250 முதல் ரூ.3,380 வரை விற்பனையானது.
ஆனால் மத்திய அரசின் முடிவை தொடர்ந்து, எம்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,320 முதல் ரூ.3,460 வரையும், எஸ்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,300 முதல் ரூ.3,430 வரையும் உடனடியாக உயர்ந்தது.
இன்னும் சில நாள்களில் இந்த விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கரும்பாலை சங்கம் வரவேற்பு
இதனிடையே, மத்திய அரசின் இந்த முடிவுகளை இந்திய கரும்பாலைகள் சங்கம் (இஸ்மா) வரவேற்றுள்ளது.