சீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் வளர்ச்சி கம்மிதான்-ரகுராம் ராஜன்
செல்லாத நோட்டு அறிவிப்பு றுகிய கால அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி: செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது நீண்டகால நோக்கில் வேண்டுமானால் பயன் அளிக்கலாம், குறுகிய கால அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலாகும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வேகமாக வளர்வது போலத் தோன்றினாலும், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமாகவே உள்ளது என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவிகிதத்திற்கு கூடுதலாக அதிகரிக்கும் பொருட்டு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தார். காரணம் உயர் மதிப்புடைய நோட்டுக்களே கறுப்பு பணம் மற்றும் கள்ள பொருளாதாரம் போன்றவை நாட்டில் வேரூன்றி வளர முக்கிய காரணியாகும்.
மின்னணு பணபரிவர்த்தனை
உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக கூடுமானவரையில் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனைகளாக மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி
பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையின் மற்றொரு அம்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் சிற்சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தாலும், பின்னர் அவை சரிசெய்யப்பட்டன. இதன் காரணமாக தொழில் துறையினரும் வர்த்தகர்களும் எந்தவிதமான தடங்கல்களும் இல்லாமல் தங்களின் ஜிஎஸ்டி வரியினை செலுத்திவருகின்றனர்.
பொருளாதார வளர்ச்சி
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்பு செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று சறுக்கினாலும், தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. சில்லறை பணவீக்க விகிதமும் விவசாய விளைபொருட்களின் விலையும் கட்டுக்குள் இருப்பதால் 2017-18ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகித்தை எட்டும் என்று புள்ளியியல் துறை கணித்துள்ளது.
ஜிடிபி உயர்வு
நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 7.5 சதவிதித்தை எட்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியும், தன்னுடைய அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதத்தை நிச்சயம் எட்டும் என்று உறுதியாக தெளிவுபடுத்திய உள்ளது.
பணமதிப்பு நீக்க பாதிப்பு
உலக வங்கியும், ஆசிய வங்கியும் வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்று உறுதியாகக் கூறினாலும், முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வேறு விதமான கணிப்பை வெளியிட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றும்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். அப்போது இந்தியப் பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றைப் பற்றி விரிவாக பதிலளித்தார்.
இந்தியாவை முந்திய சீனா
இந்தியாவும் சீனாவும் பொருளாதார வளர்ச்சியில் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றாலும், இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் சுவராசியமானதாகும். இந்தியா ஜனநாயக நாடு என்பதால், சொத்துரிமை, ஜனநாயகம் என்பது முக்கியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பொருளாதார வளர்ச்சியில் தற்போது இந்தியா சீனாவைவிட சற்று பின்தங்கி உள்ளது என்றார்.
மோசடியாளர்கள்
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சீனாவை விட சற்றே பின்தங்கி இருப்பதற்கு மற்றொரு காரணம், பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது தான். வங்கிகளில் மோசடி செய்து கடன் வாங்கியவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கடனை திருப்பிச் செலுத்துவதில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆகவே, வங்கிகள் வராக்கடன் மாயையில் இருந்து விரைவில் வெளிவரவேண்டியது அவசியம் ஆகும்.
பொதுமக்களுக்கு பாதிப்பு
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி விளக்கும்போது, மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பு ரிசர்வ் வங்கியுடன் முறையாக கலந்தோலோசிக்கவில்லை. செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது நீண்டகால நோக்கில் வேண்டுமானால் பயன் அளிக்கலாம், குறுகிய கால அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலாகும். அதனால், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு சரியான நடவடிக்கை ஆகாது.
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை என்பது மிக நல்ல நடவடிக்கையாகும். ஆனாலும், அதை சற்று ஆழ்ந்து சிந்தித்து இன்னும் நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி இருக்கலாம் என்று விரிவாக விளக்கம் அளித்தார். உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே மத்திய அரசு ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற்ற நினைத்தது குறிப்பிடத்தக்கது.