இந்தியாவின் ஏற்றுமதி 2016 டிசம்பரில் 5.72 % உயர்வு
2016 டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதித் துறையில் 5.72% வளர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களிலும் ஏற்றுமதியின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 5.72% அளவுக்கு அதிகரித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் முடிவில், நாட்டின் இறக்குமதி 0.5% உயர்வுடன் உள்ளது. அதேசமயம், ஏற்றுமதி 5.72% உயர்வுடன், 23.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதன்மூலமாக, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 10.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் ஏற்றுமதியின் அளவு 23.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 5.72% அதிகரிப்பாகும். இது கடந்த 21 மாதங்களில் இல்லாத புதிய ஏற்றம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் இறக்குமதியும் கடந்த டிசம்பர் மாதத்தில் 34.25 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 0.46% அதிகரிப்பாகும். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை 10.36 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதேபோல உற்பத்தித்துறையில் உற்பத்தியும் 5.7% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 280 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அதிகரிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.