2018-19ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.4% வளர்ச்சியடையும் -உர்ஜித் பட்டேல்
நடப்பு 2018-19ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 7.4 சதவிகிதம் என்ற உயரத்தை எட்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.
டெல்லி: இந்தியப் பங்குச் சந்தையில் அந்திய முதலீடுகள் தொடர்ந்து வந்து குவிவதால் நடப்பு 2018-19ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 7.4 சதவிகிதம் என்ற உயரத்தை எட்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் கடந்த ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது சற்று தள்ளாடியது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகிமாக சரிந்தது.
வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தால்தான் உற்பத்தித் துறையில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே செப்டம்பர் காலாண்டின் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சரியக் காரணமாகும்.
அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி
பருவ மழையும் வழக்கம்போல கைகொடுத்ததால் பின்னர் வந்த காலாண்டுகளில் விவசாய உற்பத்தியும் தொழில் துறையின் உற்பத்தியும் அமோகமாக இருந்ததால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திய அதிகரித்தது. இதன் தாக்கம் பணவீக்க விதிதத்திலும் எதிரொலித்தது. வர்த்தகர்களும் தொழில்துறையினரும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களை ஓரளவு புரிந்துகொண்டதால், தங்களின் விற்பனை, கொள்முதல் மற்றும் நிகர வரியை முறையாக செலுத்தியதால், நாட்டின் வரி வருவாயும் அதிகரித்தது. கூடவே, முன்கூட்டி செலுத்திய வருமான வரியும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூலானதால் 2017-18ம் ஆண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்தது.
ஆசிய வங்கியின் கணிப்பு
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தொடக்கத்தில் சற்று சரிந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பின்னர் வேகமெடுத்தது. கடந்த ஆண்டின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என்றும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவிகிதத்தை தொடும் என்று உலக வங்கியும் கணித்துச் சொன்னது. ஆசிய வளர்ச்சி வங்கியும் தன்னுடைய ஆய்வறிக்கையில் 2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 7.6 சதவிகிதத்தை எட்டும் என்றும் கணித்துச் சொன்னது.
அதிகரித்த அந்நிய முதலீடு
உலக வங்கியும் ஆசிய வங்கியும் அறுதியிட்டுச் சொன்னதை தற்போது மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலும், 2018-19ம் நிதியாண்டில் நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவிகிதத்தை எட்டும் என்று அடித்துச் சொல்கிறார். சர்வதேச நாணய நிதிக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது இதனை அவர் தெரிவித்தார். கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி சற்று சுனக்கமாக காணப்பட்டாலும், 2018-19ம் நிதி ஆண்டில் அந்த நிலை இருக்காது. நம்முடைய பொருளாதார வளர்ச்சியின் மீது உலகளாவிய அளவில் அந்திய முதலீட்டாளர்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தியச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறார்கள். இது நம்முடைய சந்தைக்கு புதிய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக உள்ளது.
அதிகரிக்கும் ஏற்றுமதி
மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியால், இந்தியப் பொருட்களுக்கு உலகளாவிய அளவில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் அதிகரித்து அந்நியச் செலாவணி வருவாயும் சீராக உயர்ந்து வருகிறது. எவ்வளதான் இடைஞ்சல்கள் எழுந்தாலும், அதை எல்லாம் தாண்டி நடப்பு 2018-19ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி நிச்சயம் 7.4 சதவிகித்தை எட்டும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விலை குறைந்த விளை பொருட்கள்
பணவீக்க விகிதத்தை பாதிக்கக்கூடிய காரணிகள் நிறைய இருந்தாலும், வழக்கமாக பெய்யும் பருவ மழையும் நடப்பு நிதியாண்டில் கைகொடுக்கும் என்பதால், விவசாய விளைபொருட்களின் விலை குறைந்து உணவுப் பொருட்களின் விநியோக சுழற்சி மேலாண்மையில் தட்டுப்பாடு எந்தவிதமான ஏற்படாமல் பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்று உறுதியாகக் கூறினார்.
ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி
கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியக்குழுவும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவிகிமாகவும் 2019-20ம் நிதியாண்டில் 7.8 சதவிகிதத்தையும் எட்டும் என்று கணிப்பு வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் வலுவான கட்டமைப்பு உள்ளதாலும் சமீபத்திய சீர்திருத்த நடவடிக்கையான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதால், வர்த்தக நடைமுறையில் இருந்து வந்த இடர்பாடுகள் முற்றிலும் களையப்பட்டதால் வரி வருவாயும் அதிகரித்துள்ளதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவிகிதத்தை எட்டுவதில் எந்த தடையும் இருக்காது என்றும் சர்வதேச நாணய நிதிக்குழு தெரிவித்து இருந்தது.