2018ல் தங்கம் இறக்குமதி 15 சதவிகிதம் சரிய வாய்ப்பு
2018ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 15 சதவிகிதம் வரையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: இந்தியாவின் தங்கம் இறக்குமதி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 2018ல் 15 சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாகத் தங்கம் இறக்குமதி 32.6 சதவிகிதம் சரிந்து 63 டன்னாக மட்டுமே இருந்தது. அதேபோல, மே மாதத்துக்கான தங்கம் இறக்குமதி மிகவும் குறைவாக 48 டன்னாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. இந்தியர்கள் தங்கத்தை புனிதமான பொருளாக மதிப்பதுடன், வருங்காலத்திற்கு ஏற்ற நல்ல முதலீடாகவும் மக்கள் கருதுகின்றனர். இதனால்தான், இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தேவை அதிகமாக உள்ளது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்க நகை விற்பனை மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 93.6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் தங்கம் இறக்குமதி செய்வது சுமார் 34 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததுள்ளது கவலைக்குறிய விசயமாகும். கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 0.66 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஜி.எஃப்.எம்.எஸ். தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளரான சுதீஷ் நம்பியாத் “சென்ற ஆண்டில் தங்கம் இறக்குமதி 880 டன்னாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் 720 டன் முதல் 750 டன் வரையில் மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
கோடாக் மகிந்திரா வங்கியின் துணைத் தலைவரான சேகர் பண்டாரி “மந்தமான முதலீடுகள் காரணமாகத் தங்கத்துக்கான தேவை மிகவும் குறைவாகவே உள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்து வருவது மற்றும் தங்கம் விலையேற்றம் போன்ற காரணங்களால் பங்கு முதலீட்டில்தான் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் தங்கம் இறக்குமதி சென்ற ஜனவரி மாதத்திலிருந்தே தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாகத் தங்கம் இறக்குமதி 32.6 சதவிகிதம் சரிந்து 63 டன்னாக மட்டுமே இருந்தது. அதேபோல, மே மாதத்துக்கான தங்கம் இறக்குமதி மிகவும் குறைவாக 48 டன்னாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களிலும் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து சேமித்து வைத்திருந்தனர். அப்போது விலை குறைவாக இருந்ததால் தங்கத்துக்கான தேவை அதிகமாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் தங்கம் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அதிக விலை காரணமாக தங்கம் இறக்குமதி மந்தமாகவே இருக்கும் என்று நம்பியாத் கூறியுள்ளார். தற்போது தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.