2019ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதத்தை தொடும் - உலக வங்கி
2019ம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவிகிதத்தை தொடும் என உலக வங்கி கணித்துள்ளது.
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வரும் 2019ம் நிதியாண்டிற்குள் 7.3 சதவிகிதத்தை எட்டும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதால் இந்த வளர்ச்சி சாத்தியம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என ஆறு மாதங்களுக்கு முன், உலக வங்கி மதிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் உலகளாவிய பொருளதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
உயர்பணமதிப்பு நீக்கம்
இந்தியப் பொருளாதாரம் 8 சதவிகிதம் என்ற மேஜிக் எண்ணைத் தொடவேண்டும் என்றால், அதற்கு பெரும் தடையாக இருக்கும் கருப்பு பொருளாதாரம் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவேண்டியது மிக அவசியம் என்பதை நன்கு உணர்ந்த பிரதமர் மோடி, இவ்விரண்டிற்கும் பக்கத் துணையாக உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் செல்லாததாக அறிவித்தார். உயர் பணமதிப்புடைய நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் சற்று மந்த நிலையை எட்டியது.
மோடியின் அறிவிப்பு
இதனை சீரமைக்கும் நோக்குடன் பிரதமர் மோடி ரொக்கப் பரிமாற்றத்திற்குப் பதிலாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மின்னணு பணப் பரிவர்த்தனையாக மேற்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கூடவே மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பதாக உறுதி அளித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி
மோடியின் வாக்குறுதியால், பெரும்பாலானவர்கள் மின்னணு பரிவர்ததனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொருளாதாரம் சற்று மேல் எழும்பி வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது. இந்த நேரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி நடைமுறை
ஜிஎஸ்டி வரிமுறையானது வாட் வரி முறைக்கு முற்றிலும் வேறுபட்டு இருந்ததால் அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை புரிந்து கொள்வதில் சற்று தடுமாறினாலும், பின்னர் அதனை ஓரளவு புரிந்து கொண்டு ஜிஎஸ்டி வரி முறையில் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தனர்.
தொழில் முறை மீட்சி
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் உள்ள விதிமுறைகளை புரிந்து கொள்வதற்கு தொழில் துறையினரும் வர்த்தகர்களும், ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டாலும், பின்னர் அதனை புரிந்து ஏற்றுக்கொண்டதால், உற்பத்தித் துறையான தொழில்துறையிலும், விவசாயம் மற்றும் சேவைத் துறையிலும் மீண்டும் வளர்ச்சி முகம் காணப்பட்டது.
ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முந்தைய காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவிகிமாக இருந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல் செய்யப்பட்ட செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 6.3 சதவிகிதத்தை எட்டியது. பின்னர் டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7.2 சதவிகிதத்தை தாண்டியுள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு
தொழில்துறையில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விவசாய விலைபொருட்களின் விலை வீழ்ச்சி ஆகிய காரணிகளால் பணவீகிக விகிதம் குறைந்ததால் டிசம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 7.2 சதவிகிதத்தை எட்ட முக்கிய காரணமாகும்.
உலக வங்கி ஆய்வறிக்கை
நமது பொருளாதார ஆய்வறிக்கையும் வரும் 2019ம் நிதியாண்டிற்குள் இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 7.5 சதவிகிதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக வங்கியின் ஆய்வறிக்கையும் இந்தியப் பொருளாதாரம் வரும் 2018ம் நிதியாண்டில் 7.3 சதவிகிதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
8 சதவிகிதம் எட்டும்
உலக வங்கி ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் தனது ஆண்டறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவிற்கு தற்போது 8 சதவிகிதத்திற்கு மேல் வளர்ச்சி தேவைப்படுகின்றது. அதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளதாதார சீர்திருத்த நடவடிக்கையும் வளர்ச்சித் திட்டங்களும் விரிவாக தொடர்ந்து நடக்குமானால், 8 சதவிதிம் என்ற மேஜிக் வளர்ச்சி எண்ணை விரைவில் எட்டக்கூடும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி
அதே சமயத்தில், அதற்கு தடையாக இருக்கும் கடன் மற்றும் முதலீடுகள், அந்நியச் செலாவணி வருவாயை கொண்டுவரும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு திட்டமிடுதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். இவற்றை எல்லாம் தொடர்ந்து செயல்படுத்தி வருமானால் இந்தியப் பொருளாதாரம் வரும் 2019ம் நிதி ஆண்டில் 7.3 சதவிகித்தை எட்டும் என்று உலக வங்கி தனது திட்ட மதிப்பீட்டு ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி சாத்தியம்
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால், வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருக்கும். 2018 -19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக அதிகரிக்கும். 2019 -20 நிதியாண்டில் இது 7.5 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது.