டொனால்ட் ட்ரம்ப் கெடுபிடி: எச்-1பி விசாவை பெறுவதற்காக விண்ணப்பிப்பது 50 சதவீதமாக குறையும்
அமெரிக்காவில் தங்கி பணி புரிவதற்கான எச்-1பி விசாவை பெறுவதற்காக விண்ணப்பிப்பது 50 சதவீதமாக குறையும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: அமெரிக்க அரசின் புதிய கெடுபிடிகளால் எச் 1 பி விசாவுக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விண்ணப்பிப்பது 50 சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
2019ம் நிதியாண்டுக்கான எச்-1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்வது கடந்த 2ம் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக எச்-1 பி விசா விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை மிகக் கடுமையாக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், சிறுகுறைகள் இருந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
அமெரிக்காவில் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவற்றை பெறுவதில் போட்டி போடுகின்றன.
65ஆயிரம் எச் 1 பி விசா
ஒவ்வொரு நிதியாண்டிலும் 65 ஆயிரம் எச்-1பி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெற்றால் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் தங்கி பணியாற்றலாம். மேலும், 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டிப்பு செய்து கொள்ளலாம். 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கான கீரின்கார்டு கோரி விண்ணப்பிக்கலாம் என்பதால், அதிகம் பேர் அமெரிக்கா செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
டிரம்ப் கெடுபிடி
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்தார். இதற்காக, எச்-1பி விசா விநியோகம் மற்றும் கால நீட்டிப்பு நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், மாற்றங்களையம் அவர் கொண்டு வந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் எச்-1பி விசா 65 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது, இதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு விசாக்கள் குறைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த 65 ஆயிரம் விசாக்களில், 20 ஆயிரம் விசாக்கள் அமெரிக்காவில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு செல்லும்.
50 சதவிகிதம் குறையும்
2019ம் நிதியாண்டுக்கான எச்-1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்வது கடந்த 2ம் தேதி தொடங்கியது. அதன்பின் பரிசீலனை செப்டம்பர் 10ஆம் தேதிவரை நடைபெறும், வரும் அக்டோபர் மாதம் விசா வழங்கும் நடைமுறை தொடங்கும். வழக்கத்துக்கு மாறாக, அமெரிக்க அரசின் புதிய கெடுபிடிகளால் இந்த விசாவுக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விண்ணப்பிப்பது கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
அமெரிக்க குடியேற்ற அலுவலக அதிகாரி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போதுள்ள சூழலை பார்க்கும்போது இந்தியா ஐடி நிறுவனங்கள் மூலமாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பது இந்த ஆண்டு கணிசமாக, அதாவது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. டிரம்ப் நிர்வாகம் புகுத்தியுள்ள பல்வேறு கட்டுப்பாடு, நெறிமுறைகளால், அதிகளவில் ஆவணங்கள் பெறப்படுகின்றன.
விண்ணப்பம் நிராகரிப்பு
இதனால், முழுமை இல்லாத, சரியாக பூர்த்தி செய்யப்படாத, கையெழுத்து இல்லாத, தவறாக பூர்த்தி செய்தல் உள்ளிட்ட தவறுகளுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், வழக்கத்துக்கு மாறாக இம்முறை வழக்கறிஞர்களும் எச்-1பி விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏராளமான தகவல்கள் மற்றும் அதற்கான ஆவண சான்றுகளை இணைப்பது அதிகரித்துள்ளதால் அதற்கான சட்ட கட்டணமும் அதிகரித்துள்ளது.
விதிமுறைகள் அதிகரிப்பு
இந்த நடைமுறைகள் இது இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர். வழக்கமாக எச்1-பி விசாவுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை என்பது கணினி மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு பரிசீலனை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட இருப்பதால், அந்த நடைமுறை தொடருமா என்பது தெரியவில்லை.
இமெயில், சமூகவலைத்தள விபரங்கள்
இந்த ஆண்டு பிரிமியம் எச்1-பி விசா வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டுமுறை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க குடியேற்றத்துறை, விசா விண்ணப்பத்தோடு கடந்த ஆண்டுகாலம் பயன்படுத்திய இமெயில், சமூக வலைத்தளங்களின் விவரம், உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய கேட்டுள்ளது.