2016 இறுதியில் எழுச்சியடையும் இந்திய பங்குச்சந்தைகள்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் சுணக்கத்தில் இருந்து மீண்டு செவ்வாய்கிழமை உயர்வுடன் முடிந்தன.
டெல்லி: கடந்த வாரங்களில் சுணக்கமாக இருந்த இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை திடீரென எழுச்சி கண்டது. மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 406 புள்ளிகள் அதிகரித்தது.
பங்கு முதலீட்டின் மீதான வருவாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில் வரி விகிதங்கள் குறைவான அளவில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அவரின் இந்த கருத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்தது.
இதையடுத்து, அவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதனால், பங்குச் சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டன. கடந்த மூன்று வாரங்களில் காணப்படாத ஒரு நாள் அதிகபட்ச ஏற்றமாகும்
முதலீட்டாளர்கள் போட்டிபோட்டு வாங்கியதை அடுத்து வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள்கள் துறை நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 2.55% உலோகத் துறை பங்குகளின் விலை 2.46% ஏற்றம் கண்டன. நுகர்வோர் சாதனங்கள் துறை பங்குகளின் விலை 2.05%, மருந்து துறை பங்குகளின் விலை 2.73%அதிகரித்தன.
ஐடிசி,டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, எப்எம்சிஜி, மருத்துவம் மற்றும் நுகர்பொருள் தொடர்பான பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.
ஐ.டி.சி. பங்கின் விலை அதிகபட்சமாக 4.02%உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் 3.23% அதானி போர்ட்ஸ் 2.87%, ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 2.25% லூபின் 2.13% ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 406 புள்ளிகள் அதிகரித்து 26,213 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 124 புள்ளிகள் உயர்ந்து 8,032 புள்ளிகளாக நிலைத்தது.