கரடியின் பிடியில் பங்குச் சந்தை - முதலீட்டாளர்களின் 1.41 லட்சம் கோடி ரூபாய் ஸ்வாஹா
பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. 6வது நாளாக கரடியின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் 1.40 லட்சம் கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளது.
டெல்லி: பங்குச் சந்தைகள் திங்கட்கிழமையன்றும் கரடியின் ஆதிக்கத்தில் பங்குச்சந்தை இருந்து வருவதால் சென்செக்ஸ் 31,626 புள்ளிகளிலும், நிஃப்டி 9,872 புள்ளியிலும் வர்த்தகம் முடிந்துள்ளது.
வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கும் என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது.
கடந்த வாரத்தில் திங்கள் அன்று எந்த விதமான சாதகமான அம்சங்களும் இல்லாததால் சற்று தள்ளாட்டத்துடனேயே சிறிய ஏற்றத்துடன் முடிந்த இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க் கிழமை முதல் ஒருவிதமான மந்த நிலையிலேயே வியாழக் கிழமை வரையிலும் வர்த்தகத்தை தொடர்ந்தன.
இதனால், பெரும்பாலான பங்குச் சந்தை நிபுணர்களும், இனிமேல் சந்தை மேல் நோக்கிச் செல்ல சாதகமான அம்சங்கள் எதுவும் இல்லாததால் இறக்கத்தை நோக்கித்தான் செல்லும் என்று சொல்ல ஆரம்பித்தனர்.
தடுமாறிய பங்குச்சந்தை
கடந்த மூன்று நாட்கள் சற்று தள்ளாட்டத்துடன் இருந்துவந்த இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக் கிழமை அன்று சற்று தடுமாற்றத்துடனேயே வர்த்தகத்தை தொடங்கியது.
சலுகை பற்றிய தகவல்
மேலும், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்ற காரணங்களினால், மந்த கதியில் உள்ள இந்திய தொழில் துறையின் வளர்ச்சியை முடுக்கி விடும் நோக்கத்தில் மத்திய அரசு சுமார் 50000 கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகளை வாரி வழங்கவிருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின.
கரடியின் பிடியில் சந்தைகள்
ஆயினும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல கால அவகாசம் பிடிக்கும் என்று ஆளும் கட்சியினரே முணுமுணுக்கத் தொடங்கியதாலும், பங்குச் சந்தையின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாலும் வெள்ளிக்கிழமை அன்று சற்று இறக்கத்துடன் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் நேரம் செல்லச் செல்ல கரடியின் பிடிக்குள் செல்ல ஆரம்பித்ததது.
சரிவுடன் முடிந்தது.
இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்களும் வந்தவதை லாபம் என்று பங்குகளை விற்றுவிட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால், வர்த்தக நாளின் ஆரம்பத்தில் சற்று தள்ளாடிய சந்தை வர்த்தகத்தின் இறுதியில், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 157.5 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.
பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணிப்பு
பெரிய அளவில் சந்தைக்கு சாதகமான செய்திகள் இல்லாத பட்சத்தில், இந்த இறக்கம் இன்றும் தொடரும் என்றும் தேசிய பங்குச் சந்தை 9600 புள்ளிகள் வரையிலும் இறங்க வாய்ப்புகள் உள்ளன என்றும் சந்தை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
சரிவுடன் தொடக்கம்
அவர்களின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே, சந்தை இன்றும் சரிவுடனேயே ஆரம்பித்தன. இது போதாது என்று ஆசியப் பங்குச் சந்தைகளும் இன்று காலையில் சரிவுடனேயே ஆரம்பிம்பித்தன. இதனை அடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளும் திங்கட்கிழமையன்று காலையில் சற்று சுனக்கத்துடனேயே ஆரம்பம் ஆகின.
சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
வர்த்தக நாளின் முடிவில் தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 91.8 புள்ளிகள் இறங்கி 9872.60 புள்ளிகளிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் சுமார் 295.81 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தக நாளின் முடிவில் 31626.63 என்ற அளவிலும் நிலை பெற்றுள்ளன. செவ்வாய்கிழமையன்றும் பங்குச்சந்தைகள் சரிவுடனே தொடங்கியுள்ளன.
ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்
பங்குச்சந்தையில் தொடர் சரிவு காரணமாக திங்கட்கிழமையன்று வர்த்தக முடிவில் 1,41,423 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று 1,33,40,008.49 ரூபாய் மூலதான மதிப்பாக இருந்தது. திங்கட்கிழமையன்று பங்குச்சந்தை சரிவினால் ரூ. 1,31,98,829 ஆக மூலதனமதிப்பு குறைந்துள்ளது.
வடகொரியா - அமெரிக்கா
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் புகைச்சலால் பெரும்பாலான அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளிலில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இறங்குமுகத்தில் வர்த்தகம்
கூடவே வரும் வியாழக்கிழமை அன்று இந்த மாதத்திற்கான எஃப் அன்ட் ஓ (F&O) வின் கடைசி தேதியாகும். இதனாலும், இனி வரும் நாட்களிலும் சந்தை இறங்கு முகத்தில் தான் வர்த்தகமாகும் என்பது பெரும்பாலான சந்தை ஆய்வாளர்களின் கணிப்பாகும்.