தாய் நாட்டிற்கு அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம் ... ரூ. 4 லட்சம் கோடி!
வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டு, சொந்த நாட்டுக்கு அதிக பணம் அனுப்பும் நாடுகளிலேயே இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
டெல்லி: இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரிபவர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 62.7 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் கோடியாகும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற பொன்மொழிக்கேற்ப சொந்த நாடு நகரத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இந்தியர்களும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை பார்க்கின்றனர்.
வெளிநாடு செல்லும் எல்லோருக்கும் ஏசி ரூம் வேலை கிடைத்து விடுவதில்லை. வெயில், மழை, குளிர் ஆகியவற்றை பொருட்படுத்தாமலும் கடுமையாக உழைத்து தாய்நாட்டில் வசிப்பவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கின்றனர்.
தாய் நாட்டுக்கு பணம்
சர்வதேச அளவில் சுமார் 200 மில்லியன் பேர் தங்களது சொந்த நாடுகளுக்கு 445 பில்லியன் டாலரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியர்கள் முதலிடம்
இதில் முதலிடத்திலுள்ள இந்தியாவைத் தொடர்ந்து, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவு பணத்தை தங்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எங்கெங்கு வசிக்கிறார்கள்
அதிக பணம் அனுப்பி வைக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, இந்த நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு அதிக பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆசியர்கள் அதிகம்
உலகிலேயே அதிகபட்சமாக ஆசியாவில்தான் சுமார் 77 மில்லியன் பேர் இடம்பெயர்ந்து வந்து பணிபுரிகின்றனர். இவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 87 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் 77 சதவிகிதத்தினர் ஆசியாவுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னிய செலாவணி கையிருப்பு
தாய்நாட்டிற்கு பணத்தை அனுப்பி வைப்பதால் மிகவும் தேவையான அன்னிய செலாவணி கையிருப்பு கூடுகிறது. அதன் மூலம் நாட்டுப்பற்றையும் இந்தியர்கள் வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர்கள், நட்பு வட்டாரங்களுக்கும் தேவையான நிதி உதவியை செய்யவும் உபயோகமாகவே இருப்பதால் இந்த சேமிப்பு முறையை வேண்டி விரும்பி கட்டாயமான ஒன்றாகவே வைத்திருக்கிறார்கள்.
தாய் நாடு திரும்பும் பணம்
மிகப்பெரிய தொகையை இந்தியாவில் நுழைய விடாமல், நம் நாட்டிலேயே தக்க வைத்துக்கொள்ள அமெரிக்க வங்கிகள் 1991ல் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டி தர முன் வந்தது. அதை விரும்பிய இந்திய குடும்பங்கள் சொந்த ஊருக்கு பணம் அனுப்புவதை குறைத்துக் கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளில் சேமிப்பு தொகை பெற்றுத்தந்த அதிக வட்டி லாபத்துடன் மீண்டும் தாய்நாடு திரும்பியது!
இந்திய பொருளாதாராம்
உலகப் பொருளாதாரமே சற்று கதிகலங்கி இருக்கையில் இந்தியப் பொருளாதாரம் உறுதித்தன்மை பெற்று நம்பிக்கையுடன் செயல்பட வைப்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டு கருவூலத்திற்கு ஆண்டுக்கு ஆண்டு அனுப்பிக் கொண்டிருக்கும் பில்லியன் டாலர்கள்தான் என்றால் மிகையாகாது.