ரோடு, தண்ணி கிடையாது.. பெங்களூருவில் புதிய கிளை அமைக்கும் திட்டத்தை கைவிட்ட இன்போசிஸ்!
பெங்களூரு: 20 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில் பெங்களூருவில் இன்போசிஸ் தொடங்க இருந்த இரண்டாவது யூனிட்டை கைவிட முடிவு செய்துள்ளது அந்த நிறுவனம். கர்நாடக அரசின் ஒத்துழைப்பின்மையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பெங்களூர்-ஒசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் 26 ஆயிரம் பணியாளர்களுடன் இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் சர்வதேச விமான நிலையம் அருகே 20 ஆயிரம் ஊழியர்களுடன் மற்றொரு கிளையை துவக்க இன்போசிஸ் திட்டமிட்டிருந்தது.
அந்த பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரசு அமைத்த தொழில் பூங்காவில் தங்களுக்கு 40 ஏக்கர் நிலம் வேண்டும் என்று 2010 ஜூன் மாதம் இன்போசிஸ் கேட்டுக்கொண்டது. ஏக்கர் ரூ.1.8 கோடி என்ற விலையில் இன்போசிசுக்கு நிலத்தை அரசு அளித்தது. இதன்பிறகு கூடுதலாக 60 ஏக்கர் நிலத்தையும் இன்போசிஸ் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் திடீரென இந்த திட்டத்தை கைவிடப்போவதாக இன்போசிஸ் தற்போது அறிவித்துள்ளது. நிலத்தை அரசுக்கே திருப்பி அளிக்கவும் இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.
இதை அந்த நிறுவனத்தின் செயல் துணை தலைவர் ராமதாஸ் காமத் உறுதி செய்துள்ளார். "ஏர்போர்ட் ரோட்டில் இருந்து தொழில் பூங்கா பகுதிக்கு நான்கு வழி சாலை அமைக்க வேண்டும், குடிநீர் சப்ளை தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டோம். அரசு உடனடியாக வசதிகளை செய்து தருவதாக கூறி நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இன்னும் எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே அங்கு தொழில் நிறுவனத்தை அமைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்று ராமதாஸ் காமத் தெரிவித்தார்.
இதனிடையே மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனத்தை அதே பகுதியில் கொண்டுவர முழு முயற்சி எடுக்கப்படும். இதற்காக அவர்கள் கேட்கும் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.