ஐடி ரிட்டன் தாக்கலில் முறைகேடு செய்தால் வரிச்சலுகை ரத்து: வருமான வரித்துறை எச்சரிக்கை
மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது போலி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
Recommended Video
டெல்லி: வருமான வரித் தாக்கலில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் வரிச் சலுகையும் ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது சரியான தகவல்களை மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 31.07.2018 ஆகும். அதேபோல் ஆண்டு வருமானம் 1 கோடி ருபாய்க்கு மேற்பட்ட பிரிவில் உள்ள தனி நபர் மற்றும் பிற நிறுவனங்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசி நாள் 30.09.2018 ஆகும்.
2017-18ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களும் தற்போது தயாராகி வருகின்றது. வருமான வரித்துறை ஆண்டு தோறும் வருமான வரி தாக்கல் செய்யும் அனைத்து விதமான படிவங்களையும் மாற்றியமைத்து புதுமைப்படுத்தி மேம்படுத்தி வருவது வழக்கமாகும். கடந்த 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரி படிவங்கள் அனைத்தும், இன்னும் ஓரிரு வாரங்களில் வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு தயாராகிவிடும் என்று தெரிகிறது.
வீட்டுக்கடன் வட்டி சலுகை
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது வரிச் சலுகைக்காக வழக்கமாக வீட்டு வாடகை, வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகையையும் (Section 80C), வீட்டுக்கடனுக்கான வட்டியையும் (Section 24) கணக்கில் காட்டுவது வாடிக்கை. இதற்கு முறையான ஆவணங்களை சமர்பிக்கவேண்டிய கட்டாயம் ஆகும்.
வருமான வரி ரிட்டன்
வீட்டு வாடகை வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்தும் மாதச் சம்பளதாரர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டு வாடகைக்கான முறையான ரசீது, வீட்டு உரிமையாளரின் பான் எண் போன்றவற்றை தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் ஒப்படைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட சில பேர், சொந்தமாக வீடு இருந்தாலும் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக, போலியாக வீட்டு வாடகை தருவது போன்று முறைகேடு செய்து, வருமான வரி ரிட்டன்களில் கணக்கை காட்டி தப்பித்து விடுவதுண்டு.
வீட்டு வாடகை முறைகேடு
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் மற்றொரு முறைகேடாக, குறிப்பிட்ட சில பேர் வாடகை வீட்டில் இருந்து கொண்டு, ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கடன் தவணை மற்றும் வீட்டுக்கடனுக்கான வட்டியையும் போலியாக கணக்கில் காட்டி வருமான வரிச்சலுகையை அனுபவித்து வருவதுண்டு.
பெங்களூரு முன்னணி
சொந்த வீடு இல்லாமலேயே, போலியாக வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடனுக்கான வட்டியையும் வருமான வரி ரிட்டனில் கணக்கு காட்டி முறைகேடு செய்வதில், மும்பை, லூதியானா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் அதிக அளவில் உள்ளதாக இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் எட்டி உள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் இருக்கும் பெங்களூருவில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் சில ஆண் மற்றும் பெண் ஊழியர்கள், தணிக்கையாளர்களின் உதவியுடன், போலியாக வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன் வட்டியை போலியாக கணக்கில் காட்டி மோசடியில் ஈடுபட்டு வருவதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை எச்சரிக்கை
வருமான வரித் தாக்கலில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் வரிச் சலுகையும் ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்து அறிக்கையும் அனுப்பியுள்ளது.
வரிச்சலுகை அனுபவிக்கும் மக்கள்
வருமான வரித்தாக்கலில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காகவே வருமான வரித்துறை வருமான வரி ரிட்டன்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது. இருந்தாலும் சில கில்லாடி நபர்கள் எப்படியாவது வருமான வரிச் சலுகை பெறுவதற்காக எப்படியாவது போலியான ஆவணங்களை காட்டி வரிச்சலுகையை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.