வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு - ஆகஸ்ட் 31 கடைசி நாள்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாகப் புது விண்ணப்ப முறையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனால், வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலக்கெடுவை நீட்டித்து அறிவிக்குமாறும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை எச்சரித்து இருந்தது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில் அதற்குரிய காலகட்டத்தில் ரூபாய் ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்களுக்கு இந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 31ஆம் தேதி காலக்கெடுவாகத் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.