கலால் வரியை ரத்து செய்யும் போராட்டம் - மார்ச் 7 வரை தொடர நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு
டெல்லி: மத்தியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் நடைமுறைகளில் வெளியான கலால் வரி குறித்த அறிவிப்பினை ரத்து செய்ய கோரிய போராட்டம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி வரையில் தொடரும் என்று நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க நகைகளின் விலை, பவுனுக்கு ரூபாய் 300 உயர வாய்ப்புள்ளது.
இதேபோல் ரூபாய் 2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி ஏற்படுத்திய அறிவிப்பு
இதனால் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு ரூபாய் 2 ஆயிரம் கூடுதல் செலவாகும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு நகைக் கடை உரிமையாளர்களுக்கும், நகை வாங்குவோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
7 ஆம் தேதி வரை தொடரும்
தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர். கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தங்களது போராட்டத்தை மார்ச் 7 ஆம் தேதி வரை தொடர நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோரிக்கைகள் வலியுறுத்தல்
இதனிடையே அனைத்து அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் ஜூவல்லரி கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வர்த்தகம் பாதிப்பு
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தினால் கிட்டதட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.