அட்சய திருதியை ஸ்பெஷல்... வாடிக்கையாளர்களை கவரும் வண்ண நகைகள்!
தங்கம் என்றாலே மஞ்சள்தான்... இந்த ஆண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை: அட்சய திருதியை தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வண்ண தங்க நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னையில் உள்ள தங்க நகைக்கடைகள் அட்சய திருதியை திருவிழாவிற்கு தயாராகி வருகின்றன. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு புதுப்புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு நகை விற்பனை நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான் என்றாலும் நாளிதழ்கள், ஊடகங்களில் அட்சய திருதியை விளம்பரங்கள் களை கட்டி வருகின்றன.
அட்சய திருதியை
இந்த ஆண்டு ஏப்ரல் 28 மற்றும் 29 என இரண்டு தினங்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மங்கல பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் கூறுவதால் மக்கள் அந்த நாட்களில் என்ன வாங்க வேண்டும் என்று இப்போதே லிஸ்ட் போட ஆரம்பித்து விட்டனர்.
செல்வம் பெருகும்
அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கவேண்டும் என்பது பெண்களின் விரும்பமாகும். வசதிக்கு தகுந்தாற்போல வீட்டுக்காரர்களிடம் சிட்டையைப் போடுவார்கள். நகைக்கடைக்காரர்களும் அட்சய திருதியைக்காக பல டிசைன் நகைகளை உற்பத்தி செய்து வைத்துள்ளனர்.
வண்ண நகைகள்
பொதுவாக தங்கம் என்றாலே மஞ்சள் வண்ணம்தான். அந்த வண்ணத்தின் மீது தனி மதிப்பும், ஈர்ப்பும் பெண்களுக்கு உண்டு. கல்வைத்த நகைகளை பலர் ஆடம்பரமாக வாங்கி அணிவார்கள். இந்த ஆண்டு பச்சை, வெள்ளை, பிங்க், சிவப்பு என பல வண்ண நிறங்களில் தங்க நகை டிசைன்களை தயாரித்து வைத்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட டிசைன்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக நகைக்கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.
மனதை கவரும் டிசைன்கள்
இளம்பெண்களை கவரும் வகையில் மெல்லிய, அதே நேரத்தில் மனதைக் கவரும் வகையிலான டிசைன்களில் தங்க நகைகளை தயாரித்து விற்பனைக் வைத்துள்ளதாகவும் நகைக்கடைக்காரர்கள் கூறியுள்ளனர். என்ன இளம்பெண்களே! இல்லத்தரசிகளே! அட்சய திருதியை பர்சேஸ்க்கு தயாரா?