கேரளாவில் பெண் ஊழியர்களை பாதுகாக்க புது சட்டம்- துணி, நகைக்கடைகளில் இனி நிற்க வேண்டாம்
கேரளாவில், கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில்
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, நகை மற்றும் துணிக்கடை, ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகளில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே காலையிலிருந்து இரவு வேலை முடியும் வரை கால் கடுக்க நின்றுகொண்டுதான் வேலை செய்ய வேண்டும். வாடிக்கையாளர் இல்லாத சூழ்நிலையிலும் கூட நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். பண்டிகை காலங்களில் இயற்கை உபாதைகளை வெளியேற்ற கூட 10 நிமிடம் செல்ல முடியாது. மதிய உணவிற்கு 15 நிமிடம் எடுத்துக்கொள்வதே அதிகமாகும். பேருந்தில் நெரிசலில் நின்று கொண்டே பயணித்து சென்று பணியிடங்களிலும் 10 மணிநேரத்திற்கும் மேலாக நிற்கும் நிலை ஏற்படுகிறது.
கேரளாவில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள் போன்ற நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், இருக்க வசதி செய்து கொடுக்காததால் நின்றுகொண்டே பல மணி நேரம் வேலை பார்க்க வேண்டி உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. 12 மணி நேரம் நின்றுகொண்டே இருப்பதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அதனால், தாங்கள் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பெண்கள் 2013ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தற்போது தீர்வு கிடைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கேரளாவில் ஓட்டல், கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஜவுளி கடைகள், நகை கடைகளில் பெண் ஊழியர்கள் அமர இருக்கை வசதி ஏற்படுத்தவேண்டும். இரவில் பணி புரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
இரவு பெண்களை வேலைக்கு அமர்த்தும்போது குறைந்தது அந்த நிறுவனத்தில் 5 தொழிலாளர்கள் பணியில் இருக்கவேண்டும். அதில் இருவர் பெண்களாக இருக்கவேண்டும். இரவில் பணிபுரியும் பெண்களுக்கு பணி முடிந்து வீடு திரும்ப நிறுவனமே வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுப்பு அளிக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டப்படி, ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உட்கார்ந்துகொண்டு வேலை செய்ய உரிமை இருக்கிறது. இந்த விதி ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வணிக நிறுவனங்களின் சட்டத்தை திருத்துவதற்காக மாநில அரசு முயற்சி செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் விரைவில் நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்ய முடியும் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் இன்றைக்கும் துணிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகளில் விற்பனையாளர்களாக பணி செய்பவர்கள் பத்துமணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே வேலை செய்கின்றனர். இரவில் வீடு திரும்பியதும் கால் வலி, உடல் வலியினால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். கேரளா போல தமிழ்நாட்டிலும் இதே போல சட்டம் கொண்டு வரப்பட்டால் பல்லாயிரக்கணக்கான விற்பனை பணியாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.