பான் கார்டுடன் ஆதார் எண்ணை உடனே இணைங்க... ஆகஸ்ட் 31 தான் கடைசி தேதிங்க!
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 2 நாட்கள்தான் உள்ளது.
டெல்லி: ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்டு 31ம் தேதியுடன் முடிவடைகிறது. காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுவரையில் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காதவர்கள் இரண்டு நாட்களுக்குள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பெரும் சிக்கலை சந்திக்க நேரும் அபாயம் உள்ளது.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தனித்தனியே ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஆதார் அடையாள எண்.
ஆரம்பத்தில் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பதை ஒரு ஃபேஷனாகவே பெரும்பாலானவர்கள் கருதினார்கள்
இப்போது அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளடைவில் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அதனை கேஸ் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கேஸ் மானியம் கிடையாது என்றும் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களின் ஆதார் எண்ணை சமையல் எரிவாயு இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்டனர்.
கருப்பு பணம்
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கும் கருப்புப்பணம் மற்றும் ஹவாலா என்னும் கள்ளப் பொருளாதாரத்தை அறவே ஒழிக்கும் நோக்கத்தின் முதல் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
அடையாள அட்டை
இதனை அடுத்து பெரும்பாலான மக்கள் தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களின் பணத்தை எடுப்பதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்று நிர்பந்தித்தது. இல்லை என்றால் பணம் எடுக்கவும் முடியாது என்று எச்சரித்தது,
வங்கி கணக்குடன் ஆதார் எண்
இதன் பின்னர் ஆதார் எண்ணை கட்டாயம் வங்கிக் கணக்குடன் இணைக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்றும் அடுத்த அஸ்திரத்தை ஏவியது. கூடவே, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இல்லை என்றால் வங்கிக்கணக்கு தொடங்கமுடியாது என்றும் அறிவித்தது.
வாடிக்கையாளர்கள்
மேலும், ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தங்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் அடுத்த அஸ்திரத்தை ஏவியது. இதனையும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் சிரமேற்கொண்டு தங்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துவிட்டுத்தான் மற்ற வேலையை பார்க்கத் தொடங்கினர்.
மின்னணு பண பரிவர்த்தனை
கூடவே, ரொக்க பண பரிவர்த்தனையை தவிர்த்துவிட்டு மின்னணு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களுக்கு பரிசுகளையும் அறிவித்தது. இதனை அடுத்து 60 சதவிகிதத்திற்கும் அதிகமனோர் வேறு வழி இல்லாமல் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.
பான் எண்ணுடன் ஆதார் எண்
இந்நிலையில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஜூலை 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இல்லாவிடில் வருமான வரித் தாக்கல் செய்ய இயலாது என்றும் எச்சரித்தது. பின்னர் காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.
பொது நல வழக்கு
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வருமான வரித் தாக்கல் செய்யும் பெரும்பாலானவர்கள், தங்களுக்கு ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்,
கூடவே, வருமான வரித்தாக்கல் செய்யும் நபர்களின் ரகசியங்கள் திருடு போவதால் அவர்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு சில தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.
தனி நபர் ரகசியங்கள்
இதற்கு வலு சேர்ப்பதுபோல, சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திரசிங் டோணி ஆகியோரின் ரகசியங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனை எதிர்த்து தனியார் நிறுவனங்கள், தனி நபர்களின் ரகசியங்கள் திருடு போவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தன.
இணைப்பு கட்டாயம்
உச்ச நீதிமன்றமும், தனி நபர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அதே சமயத்தில் மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் எனவும் அறிவுறுத்தியது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ வரும் வரையிலும் கட்டாயம் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆகும் என்பது இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
எத்தனை கஷ்டம்
ஆகவே, மத்திய நிதி அமைச்சகமும் வரும் ஆகஸ்டு 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை கட்டாயாம் பான் எண்ணுடன் இணைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அதுபோலவே, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஒரு ஆதார் கார்டு எண்ணை வாங்கி எத்தனை கஷ்டங்களை அனுபவிப்பது.