விஜய் மல்லையா போல 28 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாட்டில் பதுங்கியிருக்காங்களாம்
இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் பொருளாதார மோசடி சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.
டெல்லி: வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். விஜய் மல்லையா போல இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த 28 பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
வங்கிகளில் கடனாக வாங்கிய கோடிக்கணக்கான ரூபாயை முறையாக திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து, மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும்.
இந்த மசோதாவின் படி, வங்கிகளில் ரூ.100 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினாலோ அல்லது விசாரணைக்காக நாடு திரும்ப மறுத்தாலோ அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். பின்னர், அவர்களுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மனு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
மேலும், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களை பண மோசடி சட்டத்தின்படி தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீதிமன்றத்தில், குற்றவாளிகளின் தரப்பு எதிர்மனு தாக்கல் செய்வது தடை செய்யப்படும். தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அடுத்த 2 ஆண்டுக்குள் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
இதனிடையே இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகள் புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, விஜய் மல்லையா, சுனய் கல்ரா, சஞ்சய் கல்ரா, சுதிர் குமார் கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கமலேஷ் பரேக், நிலேஷ் பரேக், எகல்வியா கார்க், வினய் மிட்டல், சேட்டன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேட்டன்குமார் சந்தேசரா, நீரவ் மோடி, நிஷால் மோடி, மெகுல் சோக்ஸி, சப்யா சேத், ராஜிவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் நரேந்திரபாய் படேல், மயூரிபென் படேல், பிரீத்தி ஆஷிஷ் ஜோபன்புத்ரா வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்திய வங்கிகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு கம்பி நீட்டியவர் விஜய் மல்லையா. அவர் வெளிநாட்டுக்கு தப்பிய பின்னர்தான் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல பல பணக்கார முதலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக வாங்கி விட்டு வெளிநாடுகளில் பதுங்கி விட்டனர். பல வெளிநாட்டு குடியுரிமை கூட பெற்று விட்டனர்.
28 பேர் இதே போல பதுங்கியிருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதலே இது போல பொருளாதார குற்றவாளிகள் பதுங்கத் தொடங்கி விட்டனர்.
விஜய் மல்லையா போல நீரவ் மோடி ரூபாய் 6,500 கோடிக்கு மேலும், மெகுல் சோக்ஸி 7080 கோடி ரூபாயும் வங்கிகளில் மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். இந்த 28 நபர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் வசிக்கும் இவர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் பொருளாதார மோசடி சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொருளாதார குற்றவாளிகள் மீது நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.