கோவில்பட்டியில் கேந்தி பூ விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
கோவில்பட்டி: கோவில்பட்டியில் கேந்தி பூ விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவில்பட்டி அருகே வில்லிசேரி, நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, கிளவிபட்டி, மந்திதோப்பு, இடைசேவல், காமநாயக்கன்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மூலம் கேந்தி பூ விளைவிக்கப்படுகிறது.
இந்த கிராமங்களில் விளையும் கேந்தி பூக்கள் கோவில்பட்டி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மார்கெட்டுகளுக்கு விவசாயிகள் மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
முகூர்ந்த நாள், பண்டிகை நாட்கள், கோவில் திருவிழாவின் போது கேந்திபூக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இந்த ஆண்டு பருவ மழை ஓரளவு பெய்ததால் கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் ஓரளவு நிரம்பியது.
இதனால் கோவில்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் கேந்தி பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கேந்தி பூக்களை ரூ.10 முதல் ரூ.15க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் செலவு தொகையை கூட ஈடு கட்ட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். கடந்த காலங்களில் மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு ரூ.50 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை குறைவால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.