ஆன்லைன் வர்த்தகத்தால் இமாலய விலையேற்றத்தில் துவரம் பருப்பு - வியாபாரிகள் குமுறல்.. தவிப்பில் மக்கள்
சென்னை: ஆன் லைன் வர்த்தக அதிகரிப்பால் கடந்த ஒரு வார காலத்தில் துவரம் பருப்பு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்தியாவில் துவரம் பருப்பு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாததால் துவரம் பருப்பு உற்பத்தி வழக்கத்தைவிட வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு மூட்டை ரூபாய் 16,100க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அது ரூபாய் 900 அதிகரித்து ரூபாய் 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ துவரம் பருப்பு ரூபாய் 170 இல் இருந்து ரூபாய் 180 ஆகவும், பாக்கெட் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூபாய் 180 இல் இருந்து ரூபாய் 190 ஆகவும் கூடியுள்ளது.
துவரம் பருப்புவை போன்று உளுந்தம் பருப்பும் ஒரு கிலோ ரூபாய் 170 இல் இருந்து ரூபாய் 180 ஆகவும், பாசிப்பருப்பு ரூபாய் 120 இல் இருந்து ரூபாய் 130 ஆகவும், கடலை பருப்பு ரூபாய் 70 இல் இருந்து ரூபாய் 75 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு உளுந்தம் பருப்பு குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. ஆனால், அங்கு போதிய விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. இதனால் உளுந்தம் பருப்பு விலையும் உயர்ந்து வருகிறது.
மேலும், பருப்பு வகைகள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆன்லைன் வர்த்தகம் என்று கூறப்படுகிறது. விளைச்சல் குறைவான நேரத்திலும் கூட, பதுக்கி வைக்கப்படுவதால், பருப்பு வகைகள் விலை மேலும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறும்போது, ‘‘துவரம் பருப்பு விலை குறைய வாய்ப்பு இல்லை. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால், துவரம் பருப்பு மூட்டைக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை விலை குறைய வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
ஆன்லைனோ, ஆப்லைனோ.. மக்களுக்கு பருப்பைப் பார்த்தாலே பயந்து வரும் நிலை ஏற்பட்டு விட்டது என்பது மட்டும் உண்மை.