700 பணியாளர்களை நீக்குகிறது மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து விரைவில் 700 பணியாளர்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்: புதிதாக பொறுப்பேற்றுள்ள சத்யா நாதெள்ளா, பல முறை பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் ஸ்மார்ட்போன் பிரிவில் 7,400 பணியாளர்களை நீக்கி இருக்கிறார்.
நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் 2,850 பணியாளர்களை நீக்குவது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் 700 பணியாளர்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2,850 பணியாளர்கள் நீக்கப்பட்டு விட்டனர். இந்த நிலையில் கூடுத லாக 700 நபர்களை நீக்க மைக்ரோ சாப்ட் முடிவு செய்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்திருக்கிறது.
குறிப்பிட்ட எந்த குழு என அறிவிக்கப்படாமல் நிறுவ னத்தின் விற்பனை, மனிதவளம் நிதி உள்ளிட்ட அனைத்து பிரிவுகள் மட்டுமல்லாமல் சர்வதேச அலுவலகங்களில் இருந்தும் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,13,000 பணியாளர்கள் உள்ளனர். லிங்க்ட்இன் இணைய தளத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.