10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் - பால்முகவர்கள் வேதனை
10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு பால் முகவர்கள் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: அனைத்து வங்கிகளும் 10ரூபாய் நாணயங்களை தங்குதடையின்றி வாங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும். அவ்வாறு வாங்க மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிக்கை வெளியிட்டாலும் அந்த பஞ்சாயத்து இன்னமும் தீர்ந்தபாடில்லை. வங்கிகளே பத்து ரூபாய் சில்லறை நாணயங்களை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை கோரி
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர்
ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
10ரூபாய் நாணயங்களை சில்லறை வணிகர்கள் எவரும் வாங்குவதில்லை" என்கிற குற்றச்சாட்டு பல மாதங்களாவே தொடர்ந்து வருகிறது. சில்லறை வணிகர்கள் வாங்குவதில்லை என குற்றம்சாட்டுகிற பொதுமக்களோ அல்லது அது குறித்து செய்தி வெளியிடுகிற ஊடகங்களோ அதன் உண்மையான காரணத்தை அறிய முற்படுவதில்லை என்பது உண்மையில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் 10ரூபாய் நாணயமோ, 10ரூபாய் தாளோ பணம் எந்த வடிவில், எந்த மதிப்பிலான ரூபாயாக இருந்தாலும் அது ஒரு சங்கிலித் தொடர் பரிவர்த்தனையாகத் தான் இருக்கும். அந்த சங்கிலித் தொடர் பரிவர்த்தனை எங்காவது ஓரிடத்தில் பாதிக்கப்படுமானால் அதன் பாதிப்பு அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.
உதராரணத்திற்கு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு தங்களிடம் தினசரி சேர்ந்திருக்கும் 10ரூபாய் நாணயங்களை சில்லறை வணிகர்கள் என்ன செய்வார்கள்? பிற மொத்த வணிகர்கள், காய்கறி, முட்டை, குளிர்பான வணிகர்கள், எங்களைப் போன்ற பால் முகவர்கள் மற்றும் இதர முகவர்களிடம் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான தொகையோடு சேர்த்து கொடுப்பார்கள்.
சில்லறை வணிகர்களிடம் இருந்து பெறப்படும் 10ரூபாய் நாணயங்களை மொத்த வணிகர்கள், காய்கறி, முட்டை, குளிர்பான வணிகர்கள், எங்களைப் போன்ற பால் முகவர்கள் மற்றும் இதர முகவர்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்களிடம் வழங்குவார்கள். அந்நிறுவனங்கள் குறிப்பிட்ட பரிவர்த்தனைக்குப் பின் மீதமுள்ள தொகையை வங்கியில் செலுத்தும். வங்கிகள் அவற்றை மறுசுழற்சி முறையில் தங்களின் வாடிக்கையாளர்களிடம் வழங்கும்.
இப்படி சங்கிலித் தொடர் போன்று நடைபெறும் பணப்பரிவர்த்தனையில் எங்கே தடங்கல் ஏற்படுகிறது? என்றால் வங்கியில் தான். ஏனெனில் அவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களான வணிகர்கள், நிறுவனங்கள் தரப்பில் செலுத்தப்படும் 10ரூபாய் நாணயங்களை எண்ணி வாங்குவதற்கும், அதனை பராமரிப்பதற்கும் சோம்பிப் போய் அதனை வாங்க மறுக்கின்றனர்.
வணிகர்கள், நிறுவனங்கள் தரப்பில் செலுத்தப்படும் 10ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்க மறுக்கின்ற காரணத்தால் மொத்த வணிகர்கள், காய்கறி, முட்டை, குளிர்பான வணிகர்கள், எங்களைப் போன்ற பால் முகவர்கள் மற்றும் இதர முகவர்களான எங்களிடம் 10ரூபாய் நாணயங்கள் முடங்கிப் போவதால் முதலீடுகள் முடங்கத் தொடங்கி வணிகம் செய்வது கடினமாகி விடுகிறது.
இதன் காரணமாக சில்லறை வணிகர்களிடமிருந்து 10ரூபாய் நாணயங்களை மற்ற வணிகர்கள் வாங்குவதில்லை. இதனால் பொதுமக்களிடமிருந்து 10ரூபாய் நாணயங்களை வாங்கினால் தங்களின் முதலீடுகள் முடங்கத் தொடங்கி வணிகம் செய்வது மிகவும் கடினமாகி விடும் என்கிற சூழ்நிலையில் பெரும்பாலான சில்லறை வணிகர்கள் பொதுமக்களிடமிருந்து 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சூழல் நிலவி வருகிறது.
இது தொடர்பாக எங்களது சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடந்த 02.02.2017அன்று 50க்கும் மேற்பட்ட பால் முகவர்கள் தங்களின் கழுத்தில் 10ரூபாய் நாணயங்களை மாலையாக தொடுத்து பேரணியாக சென்று இந்திய ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் திரு. வெங்கடேசன் அவர்களிடம் 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து வந்தோம். எங்களது மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அன்றைய தினமே ஊடகங்கள் வாயிலாக 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டனர்.
ஆனால் இவ்விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து வாங்க மறுத்து வருகின்றன. இதனால் அனைத்து வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்களிடமிருந்து 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சூழ்நிலையே தற்போதும் தொடர்ந்து வருகிறது.
எனவே பொதுமக்கள் சிரமத்தை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இனியாவது விழித்துக் கொண்டு அனைத்து வங்கிகளும் 10ரூபாய் நாணயங்களை தங்குதடையின்றி வாங்க, தாமதமின்றி உத்தரவிட வேண்டும். அவ்வாறு வாங்க மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அனைத்து வங்கிகளும் 10ரூபாய் நாணயங்களை தங்குதடையின்றி பெறாத வரை அனைத்து வணிகர்களும் பொதுமக்களிடமிருந்து தடையின்றி பெறுவது என்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.