ஜன் தன் வங்கிக் கணக்கிற்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை - எஸ்பிஐ
ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு மாதாந்திர குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாரத ஸ்டேட் வங்கிகூறியுள்ளது.
மும்பை: நகரங்களில் வசிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மாதாந்திர குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை ஜன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கியவர்களுக்கு பொருந்தாது என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்ச இருப்பாக 500 ரூபாய் இருந்தால் போதுமானது. செக் புக் வைத்திருப்பவர்கள் ரூ.1000 இருப்பாக வைத்திருக்க வேண்டும். இதுதான் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது.
மாத இருப்புத் தொகை
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மாத குறைந்த பட்ச இருப்பாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் நகரங்களில் வசிப்பவர்கள் ரூ.3000 சிறு நகரங்களில் வசிப்பவர்கள் ரூ.2000 கிராமங்களில் வசிப்பவர்கள் ரூ.1000 தங்கள் கணக்கில் குறைந்த பட்சமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 20 முதல் 50 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. வங்கியின் இந்த புதிய உத்தரவுகள் வாடிக்கையாளர்களிடம் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜன் தன் வங்கிக் கணக்கு
இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் ஜன் தன் வங்கிக் கணக்கு பொருந்துமா என்பது பற்றி தெளிவான அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஏனென்றால் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்த பட்ச இருப்புத்தொகை தேவையில்லை என்ற சலுகையுடன் வங்கிக் கணக்கு தொடங்கப் பட்டது.
எனவே ஜன் தன் வங்கிக் கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டுமா என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கம் அளித்துள்ளார்.
அருந்ததி பட்டாச்சாரியா
ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அருந்ததி பட்டாச்சாரியா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம் மற்ற வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தும் என்று அருந்ததி பட்டாரியா கூறியுள்ளார்.
எஸ்பிஐ வங்கி விதிமுறை
நாங்கள் கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறை ஒன்றும் புதிதாக கொண்டு வரப்படவில்லை. அனைத்து வங்கிகளிலும் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. வாடிக்கையாளர்களை அதிகம் சேர்க்க வேண்டும், வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு குறைந்த பட்ச இருப்பு தொகை திட்டத்தை தள்ளுபடி செய்தோம். அதை இப்போது கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறை ஏன்?
பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகள் 10 கோடிக்கும் அதிகமாக எஸ்.பி.ஐ வங்கியில் உள்ளது. இக்கணக்குகளை பராமரிக்க கூடுதல் தொகையானது தேவைப்படுவதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அருந்ததி பட்டாச்சாரியா கூறியுள்ளார். எஸ்.பி.ஐ வங்கி பிறப்பித்துள்ள புதிய உத்தரவுகளை, மறு பரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு அவ்வங்கியிடம் வலியுறுத்தியிருந்தது ஆனால் இதில் மறுபரிசீலனை செய்வது பற்றி அருந்ததி பட்டாச்சாரிய எதுவும் தெரிவிக்கவில்லை.