புதிய வளர்ச்சிகளை நோக்கி இந்தியா முன்னேறுகிறது- பிரதமர்
Recommended Video
டெல்லி: புதிய வளர்ச்சிகளை நோக்கி இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற வந்த மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர் தனது 5-ஆவது சுதந்திர தின உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது. புதிய வளர்ச்சிகளை நோக்கி நாடு முன்னேறி கொண்டிருக்கிறது.
இந்தியா 6-ஆவது இடம்
பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆழ்ந்த இரங்கல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை சிறப்பாக பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலிருந்து மீள அரசு நடவடிக்கை எடுக்கும். இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அசோக சக்கரம்
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துள்ளன. அதில் உள்ள நீல நிறம் அசோக சக்கரத்தை காட்டுகிறது.
கலங்கரை விளக்கம்
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியை நிலைநாட்டுகிறது. நமது அரசியல் சாசனம் கலங்கரை விளக்கமாக உள்ளது. நாட்டின் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மக்கள் பக்க பலமாக உள்ளனர் என்றார் மோடி.