வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அறிவிப்பு
டெல்லி: சில்லறை விற்பனை, பாதுகாப்பு உள்ளிட்ட 15 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பொருளாதார முன்னேற்றத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும், நேரடி முதலீடு தொடர்பான பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கட்டுமானம், ஒளிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 15 துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டில் முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்குதலை நோக்கமாக் கொண்டு, புதிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலீடுகளை அரசு பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை போக்கி புதிய சீர்திருத்தங்கள் மூலம் நேரடி முதலீடுகளை பெறுவதற்கு வழி உண்டாகும் வகையில் மத்திய அரசு இந்த சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இது தொழில் துறையினரிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமானத் துறையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்களின் மூலம் இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளிலில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து மேக்-இன்-இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் உற்பத்தித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், பன்னாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board (FIPB) ) உச்சவரம்பு 3 ஆயிரம் கோடியிலிருந்து 5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்தியில் அமைந்தது முதல் காப்பீட்டுத்துறையில் துறையில் அதிகபட்ச நேரடி முதலீடு, 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே திட்டங்களில் 100 சதவீத நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், இந்தியாவில், வெளிநாட்டு நிறுவனங்கள், இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சீனா, 1.8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா, 1.75 லட்சம் ரூபாய் கோடி முதலீட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.