ஹோட்டல்களில் சேவை கட்டணத்தை ரத்து செய்யுங்கள் - ராம்விலாஸ் பஸ்வான்
சேவை கட்டணத்தை ரத்து செய்யுமாறு ஓட்டல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
சென்னை: ஹோட்டல்களில் போய் 2 இட்லி சாப்பிட்டாலே 100 ரூபாய் பில்லுடன் கூடவே 15 ரூபாய்க்கு சேவை கட்டணம் வரை போடுவார்கள். இனி உணவகங்கள் சேவை கட்டணத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக உணவகங்களில் சாப்பிடும் உணவுக்கு, அங்கு வழங்கப்படும் சேவைக்கென சேவைக் கட்டணத்தையும் சேர்த்து பில்லாக அளிக்கப்படும். சேவைக் கட்டணமானது 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்ளது. இது தவிர டிப்ஸ் எனப்படும் சப்ளையருக்கு அளிக்கப்படும் தொகை இதில் இடம்பெறாது.
சேவைக் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடமிருந்து வசூலிப்பது முறையற்ற வர்த்தக நடவடிக்கையாகும் என்று மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
சேவைக் கட்டணம் என்பது, வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் சேவை திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் வசூலிக்கப்பட வேண்டியதாகும். இதை அளிப்பது குறித்து நுகர்வோர் தீர்மானிக்கலாம் என்று இந்திய ஹோட்டல் சங்கமும் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை மத்திய நுகர்வோர் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், திருப்தி இல்லாத சேவையை பெறும் வாடிக்கையாளருக்கு சேவை கட்டணத்தை அளிக்காமலிருக்கும் உரிமை உண்டு என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேவைக்கட்டணம்
ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்களில் சாப்பிடும் பெரும்பாலான நுகர்வோர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். விடுதிகள் மிக மோசமாக சேவை அளித்தாலும் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
சேவைக்கட்டணம்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் படி, எந்த ஒரு விற்பனையும் முறையற்ற வகையிலோ நுகர்வோருக்கு திருப்தி அளிக்காத வகையிலோ இருப்பின் அதற்குக் கட்டணம் விதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. இவ்விதம் கட்டாயமாக வசூலிக்கப்படும் சேவைக் கட்டணமானது முறையற்ற வர்த்தக நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.
சுற்றறிக்கை
இதையடுத்து மாநிலங்களுக்கு நுகர்வோர் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தங்கள் மாநிலத் தில் உள்ள உணவகங்கள், விடுதிகளில் அளிக்கப்படும் சேவைக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம், முழுக்க முழுக்க திருப்தியான சேவையைப் பெற்றால் மட்டுமே அளிக்க வேண்டும்.
நுகர்வோருக்கு அதிகாரம்
இதை ரத்து செய்யும் அதிகாரம் நுகர்வோருக்கு உள்ளது. இந்த விவரத்தை அனைத்து உணவகங்களிலும் நுகர்வோருக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சேவைக் கட்டணமானது முழுக்க முழுக்க வாடிக்கையாளர் தாமாக முன்வந்து அளிப்பதாகும். சேவை திருப்திகரமானதாக இருப்பின் மட்டுமே இதை அளிக்கலாம். இல்லையெனில் இதை ரத்து செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.
ராம்விலாஸ் பஸ்வான்
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹோட்டல்களில் சேவைக் கட்டண விதிப்பு கட்டாயமல்ல. ஹோட்டல்களில், உணவு வழங்கும் பணி சிறப்பாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கருதினால் சேவைக்கட்டணம் தாமாக முன் வந்து வழங்கலாம் என்று தான் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதனால் தான் ஹோட்டல்களில், சேவை கட்டண விதிப்பு கட்டாயமல்ல என அறிவிக்க உத்தரவிடப்பட்டது.
ஹோட்டல்களுக்கு உத்தரவு
ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் என்பதை, 'டிப்ஸ்' என்று தான் சொல்ல வேண்டும். இப்போது, அந்த சேவைக்கட்டணத்தை ரத்து செய்யுமாறு ஹோட்டல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேவை வரி
ஹோட்டல்களில், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க, மசோதா கொண்டு வரும் திட்டமில்லை. உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க ஹோட்டல்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராம்விலாஸ்பஸ்வான் கூறியுள்ளார்.