2019 லோக்சபா தேர்தல் வருது... ஜிஎஸ்டியை எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மும்பை: 99 சதவிகித பொருட்கள் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். முடிந்தவரை ஜி.எஸ்.டி. வரி எளிமையானதாக இருக்க வேண்டும் என்று வேலை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மோடி.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 5 ஆண்டுகள் முடியப்போகிறது. அடுத்த லோக்சபா தேர்தலும் வரப்போகிறது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஜிஎஸ்டி என அதிரடிகளை புகுத்தினார் மோடி. உயர்மதிப்புடைய நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் காத்துக்கிடந்தனர். அந்த சம்பவம் நிகழ்ந்து ஆறுமாதங்களுக்குள் மற்றொரு அதிரடி அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரே தேசம் ஒரே வரி என்ற கொள்கைகளை முன்வைத்து 2017 ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை 'கப்பார்சிங் டாக்ஸ்' என்று ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கிண்டலடித்தனர். 0,5,12,18,18 என பலமுனை வரி விதிப்பு மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தவே அடுத்தடுத்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்களுக்கு வரி குறைப்பும், வரி விலக்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரியின் கீழ் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ரிபப்ளிக் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி 99 சதவீத பொருட் கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஜிஎஸ்டியை மேலும் எளிமையாக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின்பு இது மேலும் 55 லட்சம் அதிகரித்துள்ளது. இனிமேல் ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவிகித ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. 99 சதவிகித பொருட் கள் அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் 18 சதவிகித ஜிஎஸ்டி வரம்பின் கீழ் அல்லது அதற்கும் குறைவான சதவிகிதத்திற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜி.எஸ்.டி வரி மூலம் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியை செயல்படுத்தியது மூலம் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி உள்ளது. நிறுவனங்கள் வரி செலுத்தில் உண்மைத்தன்மை ஏற்ப்பட்டு உள்ளது. நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி எளிமையானதாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். இந்திய பொருளாதாரம் வெளிப்படையான தன்மைக்கு மாறி வருகிறது என்றும் கூறி உள்ளார். லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் ஆளும் பாஜக அரசு புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.