முகேஷ் அம்பானியின் 45 நிமிட பேச்சால், ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.15,000 கோடி... 'ஊஊஊஊ'!
மும்பை: ஜியோ பற்றி, முகேஷ் அம்பானி உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, இந்திய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளில் ரிலையன்ஸ் பங்குகளின் விலை எகிறத் தொடங்கியதோடு, ஏர்டெல், ஐடியா பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் நேற்று தெரிவித்தார்.
டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரோமிங் கட்டணம் கிடையாது என்றும் அவர் அறிவித்தார்.
அந்த 45 நிமிடங்கள்
மும்பையில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பில் அம்பானி சுமார் 45 நிமிட நேரம் உரையாற்றினார். இந்த 45 நிமிட நேரம் என்பது, ஏர்டெல், ஐடியா போன்ற சக தொலை தொடர்பு போட்டியாளர்களுக்கு கெட்ட நேரம் என்று சொன்னால் அதுமிகையாகாது.
ஏர்டெல்லுக்கு சரிவு
ஏனெனில் முகேஷ் அம்பானி உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, இந்திய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளில் ரிலையன்ஸ் பங்குகளின் விலை எகிறத் தொடங்கியதோடு, ஏர்டெல், ஐடியா பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
வீழ்ச்சி
ஏர்டெல் பங்குகள் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. ஆதித்ய பிர்லா நிறுவனமான ஐடியாவின் பங்ககுகள், 11 சதவீதம் சரிந்தன. இது அந்த நிறுவனம் 52 வாரங்களில் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி.
ரூ.15.5 ஆயிரம் கோடி
இவ்விரு கம்பெனி பங்குகளின் வீழ்ச்சியையும் இணைத்தால், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரத்து 600 கோடி அளவாகும், என்று பங்கு சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வீழ்ச்சியோடு முடிந்தன
பங்கு சந்தை நேரம் முடிவடைந்தபோது, ஐடியா பங்குகள் 10.5 சதவீத வீழ்ச்சியுடனும், ஏர்டெல் பங்குகள் 6.3 சதவீத வீழ்ச்சியுடனும் காணப்பட்டன. அதேநேரம், ஏர்டெலுக்கு நேர்ந்த பின்னடைவை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு வகைகளில் பணத்தை கபளீகரம் செய்ததாக அந்த நிறுவனம் மீது குற்றம்சாட்டும் அவர்கள், தற்போது மனது மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.