அமெரிக்கர்களையே பணியமர்த்துங்கள் : ஐடி நிறுவனங்களுக்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஐடியா
இந்திய ஐ,டி நிறுவனங்கள் எச்1.பி விசா பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அமெரிக்கர்களை பணியில் அமர்த்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூர்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் முதல் நல்ல காரியமாக அகதிகள் வருவதை கட்டுப்படுத்த சீனப் பெருஞ்சுவரைப் போல அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவிற்கும் இடையில் தடுப்புச் சுவர் கட்டப்போவதாக அதிரடியாக அறிவித்தார்.
அடுத்ததாக, அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவதற்காக வழங்கப்படும் எச்1.பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு பாதிப்பு
எச்1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரு மடங்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு வழி செய்யும் சட்ட மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது ஏனெனில் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணி புரிபவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
அமெரிக்கா வேலை அமெரிக்கர்களுக்கே
எச்1.பி விசா வழங்குவதால், பிற நாட்டவர்கள் அமெரிக்க இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தட்டிப்பறிக்கின்றனர். இதனால், அமெரிக்காவில் வேலை இல்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதனை கட்டுப்படுத்த எச்1.பி விசா வழங்கும் நடைமுறையில் நிச்சயமாக மாற்றம் கொண்டுவருவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தர் பிரச்சாரத்தின் போது டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.
என் 1 பி விசா
சொன்னதுபோலவே, இப்போது எச்1.பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தையில் தகவல் தொடர்புத் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்க எச்- பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என்று 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களை பணியமர்த்துங்கள்
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தங்கள் நாட்டில் அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இதை கையாள இந்திய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் அலுவலகங்களில் அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.
அந்த நாட்டினரை பணியமர்த்துவோம்
அதேபோல் எந்த நாட்டில் அலுவலகம் அமைக்கிறோமோ அதே நாட்டினரையே பணியில் அமர்த்த வேண்டும். இதன் மூலமே நாம் உண்மையான பன்னாட்டு நிறுவனம் என்ற நிலையை அடைய முடியும். அத்துடன் நாம் எச்1 பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் நிறுத்த வேண்டும்.