500, 2000 ரூபாய் நோட்டை தடை செய்த நேபாளம்- இனி 100 ரூபாயாக கொண்டு போங்க
நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் அங்கு 100 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். புதிய 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்ய முடியாது.
காத்மண்டு: இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும்போது முற்றிலும் 100 நோட்டுக்களாகவோ அல்லது அமெரிக்க டாலராகவோ மாற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லையேல் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டும். உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் 200, 500 மற்றும் 2000 நோட்டுக்களை பயன்படுத்த நேபாள அரசு உத்தரவிட்டு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் ஒரே இந்து நாடான நேபாளம் இந்தியாவின் அண்டை நாடாகும். அது மட்டுமல்லாமல் இந்தியாவின் நட்பு நாடும் கூட. இதன் காரணமாகவே நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் முக்கிய பங்காற்றி வருகிறது.
நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் இந்திய ரூபாய்களையே கொண்டுசெல்கின்றனர். நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும்போது, மற்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கொண்டு செல்வதைப் போல, அமெரிக்க டாலராக கொண்டு செல்லத் தேவையில்லை.
நேபாள சுற்றுலா
இந்திய ரூபாய்களையே எடுத்துச் சென்று அங்கு போய் நேபாள கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம். எளிதான கரன்சி பரிமாற்றம் காரணமாகவே இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் அதிகம் உள்ளனர். இனிமேல், நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் போது இந்தியாவின் 100 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும்.
2000 ரூபாய்க்கு தடை
புதிய 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று நேபாள நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோட்டா தெரிவித்துள்ளார். 200 முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்வதற்கான காரணத்தை கூற நேபாள அரசு மறுத்துவிட்டது.
நட்பு நாடு நேபாளம்
இந்தியாவும் நேபாளமும் நட்பு நாடுகள் மட்டுமல்லாமல் வர்த்தக கூட்டாளிகளும் கூட. இதன் காரணமாகவே இருநாட்டு வர்த்தகர்களும் தங்களின் வர்த்தகத்தை எளிதாக பரிமாற்றம் செய்து வருகின்றனர். நேபாளத்தின் தற்போதைய அறிவிப்பு இரு தரப்பு வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வர்த்தகமும் பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய ரூபாய் நோட்டுக்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 நோட்டுக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பின்னர் படிப்படியாக 200, 100, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு புழக்கத்திற்கு விடப்பட்டன. தடை செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் பெரும்பாலானவற்றை மத்திய ரிசர்வ் வங்கி திரும்பு பெற்றுக்கொண்டதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், நேபாளத்தில் சுமார் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நேபாள அரசின் வங்கி வசம் தேங்கி விட்டன.
அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பல முறை வேண்டுகோள் விடுத்தும் இந்தியா ரிசர்வ் வங்கி பாரா முகமாகவே உள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேபாள அரசு, இந்தியாவின் 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. இனிமேல், இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும்போது முற்றிலும் 100 நோட்டுக்களாகவோ அல்லது அமெரிக்க டாலராகவோ மாற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லையேல் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு கடும் சிரமத்தை சந்திக்க வேண்டும்.