4 ஆண்டுகளில் ஐ.டி. வேலைவாய்ப்பு 50 சதவீதம் குறையும்: கிரிசில் 'திடுக்' தகவல்
மும்பை: அடுத்த நான்கு ஆண்டுகளில் தொழில்நுட்ப துறையில்(ஐ.டி.) வேலைவாய்ப்பு 50 சதவீதம் குறையும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் என்ஜினியரிங் பட்டம் பெறுகிறார்கள். அதில் பலர் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறார்கள். இந்நிலையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு 50 சதவீதம் குறையும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013-2014 நிதியாண்டில் ஐ.டி. நிறுவனங்கள் 1.05 லட்சம் பேரை பணியமர்த்தும் என்றும் இந்த எண்ணிக்கை 2017-2018ம் நிதியாண்டில் 55 ஆயிரமாக குறையும் என்றும் கிரிசில் கணித்துள்ளது.
தனியார் வேலைகளில் தற்போது 24 சதவீதம் அதாவது 31 லட்சம் பேரை ஐ.டி. துறை தான் பணியமர்த்தியுள்ளது. ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு குறைவதன் தாக்கம் பொது வேலைவாய்ப்பிலும் தெரியும்.
முன்னணி ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ ஆகியவைக்கு நான்கில் 3 பங்கு வருமானம் பொருளாதாரத்தில் மந்தமாக உள்ள வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து தான் வருகிறது. அந்நாடுகளில் பொருளாதார நிலைமை சரியில்லாததால் செலவை குறைக்குமாறு அவை வலியுறுத்துகின்றன.
ஐ.டி. துறையில் ஊழியர்களின் சம்பளம் தான் அதிக செலவு என்பதால் பலரின் வேலை பறிபோகிறது. 2013-2014ம் நிதியாண்டில் ஐ.டி. நிறுவனங்களின் செலவில் 60 சவீதம் ஊழியர்களின் சம்பளம் தான். இதனால் ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதிலும், புதியவர்களை பணியமர்த்தாமல் இருப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றன.