புது ஐடிஆர் விண்ணப்பம் இன்று முதல் அறிமுகம்- ஆதார் எண்ணை இணைச்சிட்டீங்களா?
புது ஆண்டு இன்று தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1 இன்று முதல் புது வருமான வரி தாக்கல் செய்யும் விண்ணப்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: வருமான வரி தாக்கல் செய்யும் மாத சம்பளதாரர்களுக்காக இன்று முதல் புது வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் ஐடிஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்துடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
புது ஆண்டு, புது சட்டம், புதிய பாரதம் உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் அறிவித்தார். நமது நாட்டில் ஏப்ரல் 1முதல் மார்ச் 31 வரை, நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.
புது ஐடிஆர் விண்ணப்பம்
மாதச் சம்பளம் மற்றும் வட்டி வருவாய் ஈட்டும் தனி நபர்கள் எளிய முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விதமாக 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தில் பல்வேறு பத்திகள் குறைக்கப்பட்டு உள்ளன.
வரிவிலக்கு பெறும் தகவல்கள்
வருமானத்துடன், வட்டி வருமானம் உடையோர் மற்றும் வரி விலக்கு பெற விரும்புவோருக்கான தகவல்களைச் சமர்ப்பிக்கும் தளத்தை ஐடிஆர் 1 என்று அழைக்கப்படும் சாஹாஜ் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 80சி, மெடிக்கிளைம் 80டி கீழ் வரும் வரி விலக்கு பெறும் குறிப்புகளும் ஐடிஆர் 1 படிவத்தில் புதிய ஐடிஆர் 1/ சாஹாஜ் படிவத்தில் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற சுமார் 18 பத்திகள் உள்ளது.
வரி விலக்கு
இத்திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் எல்ஐசி, பிபிஎப், வீட்டுக்கடனில் திரும்ப அளித்த தொகை எனப் பல பிரிவுகளின் கீழ் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறலாம். மேலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் தவணைக்கான தொகைக்கு 80டி சட்டத்தின் கீழ் வரி விலக்குப் பெறலாம்.
எளிமை படுத்தப்பட்ட படிவம்
வருமான வரி தாக்கல் படிவத்தில், 2 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயலற்று கிடக்கும் வங்கி கணக்குகள் குறித்த விபரங்கள் நீக்கப்பட்டு 3 பக்க விண்ணப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கணக்கு தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எளிமையான படிவம் கொண்டுவரப்படுவதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண் கட்டாயம்
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்துடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.