ஏடிஎம்களில் பணம் நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடு - 2019 பிப்ரவரி முதல் அமல்
ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்படும் பணம், கொள்ளை போவதை தடுக்க, சில அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
டெல்லி: ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள் கடத்தப்படுவது டிரைவர் தாக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள பல புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 8 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:
ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்படும் பணம், கொள்ளை போவதை தடுக்க, சில அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி வங்கிப் பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்களில் டிரைவர் இருக்கைக்கு அருகில் ஓர் ஆயுதம் ஏந்திய காவலாளியும் வாகனத்தில் பின் பகுதியில் ஒரு காவலாளியும் கட்டாயம் இருக்க வேண்டும். அதில் பணம் நிரப்பும் அதிகாரிகள் இருவர் இடம் பெற வேண்டும்.
வாகன பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் காவலாளிகள் முன்னாள் ராணுவ வீரராகவோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
வாகனத்தின் முன் பின் மற்றும் உள் பகுதிகளில் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் இடம் பெற வேண்டும். வாகனத்தில் அலாரம் வசதியும் இடம் பெற வேண்டும். வாகனத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது.
நகர்ப்புறங்களில் இரவு 9 மணிக்குப் பின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பக் கூடாது. கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்கு மேலும் மற்றும் நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேலும் பணம் கையாளும் பணியில் ஈடுபடக் கூடாது.
பணம் எடுத்துச் செல்லப்படும் வாகனம் எங்கு செல்கிறது எந்தப் பகுதியில் உள்ளது என்பதை அறியும் வகையில் அதில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த நடைமுறை 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.