ஜிஎஸ்டியில் 12 லட்சம் நிறுவனங்கள் பதிவு - ஹஷ்முக் ஆதியா
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் இதுவரை 12 லட்சம் வணிக நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையில் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளது, தாங்கள் முழுமையாக ஜிஎஸ்டி வரிமுறையை ஏற்றுக் கொண்டனர் என்பது தெளிவாகிறது என்று வருவாய் துறை செயலாளர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் வர்த்தக நடைமுறைகளையும் கணக்கு வழக்குகளையும் ஜிஎஸ்டி வரிமுறைக்கு ஏற்றவாரு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்டி விதி முறையின் படி ஜிஎஸ்டி வரிவரம்பிற்குள் வரும் அனைத்து வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் ஆண்டு வருவாய் 20 லட்சத்திற்குள் வரும் பட்சத்தில் ஜிஎஸ்டியில் பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், அதே சமயத்தில் தாங்களே ஜிஎஸ்டியில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் முடியும். ஏனென்றால். ஜிஎஸ்டியில் பதிவு செய்தால் மட்டுமே வர்த்தகர்களும் தொழில் துறையினரும் கொள்முதல் உள்ளீட்டு வரி பயன்பாட்டை முழுமையாக பெற முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரி
ஜிஎஸ்டியில் பதிவு செய்தால் மட்டுமே வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் கொள்முதல் உள்ளீட்டு வரி (Input Tax Credit) பயன்பாட்டை முழுமையாக பெற முடியும். ஏன் என்றால் உள்ளீட்டு வரி பயன்பாடு என்பது ஒரு சங்கிலித் தொடர் பயன்பாடு ஆகும், எனவே அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
ஜூலை 30 கடைசி தேதி
இதுவரையிலும் வாட் வரி விதிப்பு முறையில் இருந்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாற்றம் செய்யாதவர்களும் தங்களின் நிறுவனங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கு தங்களின் வரி ஆலோசகர்களின் மூலம் தீவிர முனைப்பு காட்டிவருகின்றனர். இதனை உணர்ந்தே மத்திய அரசும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டித்தது.
|
ஜிஎஸ்டியில் விண்ணப்பம்
சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 10 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ட்டு வருகின்றன என்று வருவாய் துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மொத்தம் 10 லட்சம் விண்ணப்பங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
ஆண்டு பரிவர்த்தனை ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புக்குள் வணிக நிறுவனங்கள் பதிவு செய்வதும் கட்டாயமல்ல. இருந்தாலும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்தால் மட்டுமே உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும்.