சுங்க கட்டணத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை.. நிதின் கட்கரி
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சிறந்த சேவையை அளிக்க மக்கள் இந்த கட்டணத்தை அளிக்க வேண்டும் என்றும்
மும்பை: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறியுள்ளார். அமைச்சரின் அறிவிப்பு லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுங்க கட்டணத்தை ரத்து செய்தால், சாலைகளை உருவாக்கி பராமரிப்பது திட்டத்தின் கீழ் சாலைக் கட்டுமான திட்டங்களுக்கான நிதி கிடைக்காது. இதனால் சுங்கக் கட்டணத்தை நீக்குவது சாத்தியமில்லை என்றார்.
2017ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற 4.60 லட்சம் விபத்துகளில் 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் சுங்கச்சாவடிகள் எப்போதும் நீக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
தரமான சாலைகள் பயன்படுத்தவும், அதற்கான சேவை தொடரவும் சுங்கச்சாவடிகள் அங்கேயே தான் இருக்கும் என்று தெரிவித்த அவர், அதை பயன்படுத்த மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார் நிதின் கட்கரி.
இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களை குறித்து பேசும் போது, நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கடந்தாண்டில் இந்தியாவில் 4. 60 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 1.46 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். மஹராஷ்டிராவில் ராஜ் தாக்கரேயின் நவ நிர்மாண் சேனா போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றன என்று நிதின்கட்கரி தனது உரையில் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 4அம்ச கோரிக்கையை லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஏற்கெனவே, திட்டமிட்டபடி வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் இயங்காது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறது. இதனால், அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.