வங்கிகளின் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது: வாடிக்கையாளர்கள் நிம்மதி
வங்கிகள் இலவசமாக அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
டெல்லி: வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என தெரிவித்திருந்தது. இதேபோல ஏடிஎம் இயந்திரங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்ய தேவையில்லை ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அளிக்கும் சேவைகள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இருப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் இலவச சேவை அளித்தாலும், அவற்றின் மூலம் ஏதேனும் லாபம் கிடைப்பதால்தான் வங்கிகளால் வழங்க முடிகிறது. எனவே, அந்த லாபத்தொகையை பிற கட்டண சேவைகளுடன் கணக்கிட்டு அதற்கு 5 ஆண்டு முன்தேதியிட்டு ஜிஎஸ்டி வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என சமீபத்தில் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பல வாடிக்கையாளர்கள் கணக்குகளை மூடிவிட்டனர். இந்த சுமையை ஈடுகட்ட, ஏடிஎம்மில் ஒரு முறை பணம் எடுத்தால் கூட கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன.
இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் ஆணையம் ஜிஎஸ்டி தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து விளக்கம் வெளியிட்டிருந்தது. இதில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என தெரிவித்திருந்தது. இதேபோல ஏடிஎம் இயந்திரங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்ய தேவையில்லை ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அளிக்கும் சேவைகள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி இல்லை என கூறியிருந்தது.
இதுபோன்று 91 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தன. இது வங்கிகளுக்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கும் நிம்மதி அளித்துள்ளது. இருப்பினும், வருமான வரி தரப்பில் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், இதில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படாதவரை வரி செலுத்த வேண்டிய அபாயத்தில் இருந்து மீண்டதாக கருத முடியாது என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியால் சாமானியர்களும் எளிதில் பாதிக்கும் முக்கியத் துறையாக வங்கித்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கித்துறைகளுக்கான வரி முன்பைவிட ஜிஎஸ்டியில் கூடுதலாக உள்ளதே இதற்குக் காரணம். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் உள்ள இலவச வரம்பிற்கு அப்பார்பட்டு பணம் எடுக்கும்போது செலுத்தும் சேவை வரியானது அதிகரித்துள்ளது.
அடிப்படை வங்கிச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்றாலும் கூட, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை, நிதிக் குத்தகை மீதான வட்டி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் செலுத்தும் வெளியேற்றத் தொகை போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். மேலும், கடன் தொகையைத் தாமதமாகச் செலுத்துவதற்காக வசூலிக்கப்படும் கூடுதல் வட்டிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.
கடன்கள் மீதான வட்டித் தொகை மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது. எனினும், தரகுத் தொகை தாமதமாகச் செலுத்துதல் மீதான கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பெறும் பங்குத் தரகு சேவைகள் ஏற்றுமதியாகக் கருதப்படாது என்றும், அவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் மீதான கட்டணங்கள் வரிக்கு உட்பட்டவை என்று அரசு கூறியுள்ளது. மறைமுக வரி விதிப்பு குறித்த விவகாரங்களுக்காக மத்தியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவரங்களை அரசு தெளிவுபடுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கிச் சேவைகள் மீது விதிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரி குறித்து வாடிக்கையாளர்களுக்கும், வங்கி நிர்வாகங்களுக்கும் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்க்கும் விதமாக மத்திய அரசின் இந்த அறிக்கை அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.