ரூ.2,000 நோட்டை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை - பொன் ராதாகிருஷ்ணன் உறுதி
ரூ.2,000 நோட்டைத் திரும்பப் பெறும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் திட்டம் அரசிடம் எதுவுமில்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் லோக்சபாவில் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாது என பிரதமர் மோடி மதிப்பு நீக்கம் செய்து அறிவித்தார். கருப்புப்பணம் பதுக்கல், கள்ள நோட்டு ஒழிப்பு போன்றவற்றிற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தார் மோடி.
இந்த திடீர் அறிவிப்பினார் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற மத்திய அரசு நிலைமையை சமாளிக்க 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. இதற்காக ஏடிஎம்கள் மாற்றம் செய்யப்பட்டன. சில மாதங்களுக்குப் பிறகு 200 ரூபாய் நோட்டுக்களும், புதிய 50 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனிடையே 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில், 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. அதற்கு ஏற்றார் போல கர்நாடகா தேர்தல் நேரத்தில் 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் மக்கள் கண்களிலேயே தட்டுப்படவில்லை.
இதனையடுத்து நாடு முழுவதும் 2000 நோட்டு விரைவில் செல்லாது என்கிற வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் பல இடங்களில் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கலாம் என்கிற செய்தி வதந்தி என்றும், மக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு லோக்சபாவில் நிதித் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், பண சரிபார்ப்பு மற்றும் செயலாக்க அமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்போது அந்தப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் திட்டம் எதுவுமில்லை என்று கூறினார்.