எச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா
கடந்த ஒன்பது மாதங்களில் வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் எழுபது சதவிகிதம் விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
டெல்லி: கடந்த 9 மாதங்களில் வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 70 சதவிகிதம் வரையில் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு, ஹெச்-1பி விசா நடைமுறையில் பெரும் மாற்றமும் கட்டுப்பாடும் கொண்டுவரப்போவதாக அறிவித்தார்.
அவர் கூறியது போலவே, கடந்த ஏப்ரல் மாதம் ஹெச்-1பி விசா விதிமுறையை கடுமையாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். கூடவே, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான அமெர்க்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகளையும் விதித்தார்.
ட்ரம்ப் அறிவிப்பால் கடும் சரிவு
இதனால், அமெரிக்காவில் தங்களின் கிளைகளைக் கொண்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன. கூடவே இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
குறைந்த டாலர் மதிப்பு
இதனை அடுத்து, இந்திய நிறுவனங்கள் அமெரிக்கவில் உள்ள தங்களின் கிளை நிறுவனங்களுக்கு அமெர்க்கர்களை பணியமர்த்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டனர். மேலும் இந்நிறுவனங்களின் வருவாயும் சரியத் தொடங்கியது. கூடவே அமெரிக்க டாலரின் மதிப்பும் குறையத் தொடங்கியது.
மனம் மாறிய ட்ரம்ப்
இதனை உணர்ந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் தன்னுடைய முடிவை தடாலடியாக மாற்றிக் கொண்டார். திறமையான ஊழியர்களுக்கு அமெரிக்காவில் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாது என்றும், அவர்களுக்கு எப்போதும் எச்-1பி விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியர்களுக்கு முன்னுரிமை
டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்பை அடுத்து கடந்த ஒன்பது மாதங்களில் வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் எழுபது சதவிகிதம் விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்வு
இதுபற்றி கருத்து கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி, "எச்-1பி விசா வழங்கும் விதி முறையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதிபர் உத்தரவிட்ட பின்பு எச்-1பி விசா விதிமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
70 சதவிகித விசா இந்தியர்களுக்கே
இந்த மாற்றங்களைப் பயன்படுத்தி, கடந்த ஒரு வருடத்தில் வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் எழுபது சதவிகிதத்தை இந்தியர்களே தட்டிச்சென்றுள்ளனர்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
6 சதவிகிதம் அதிகரிப்பு
அதபோலவே, ஆண்டு தோறும், வழங்கப்படும் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கையும், தற்காலிகமாக அமெரிக்காவில் தங்கி இருந்து பணி புரிவதற்காக வழங்கப்படும் எல்-1 விசாக்களின் (Work Permit) எண்ணிக்கையும் சுமார் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூடுதலாக அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடு கிடையாது
மேலும், அதிபரும் எச்-1பி விசா மறுஆய்வு பற்றி பேசினார். எச்-1பி விசா விதிமுறைகளில் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், இன்னும் மறுஆய்வில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
அதுபோலவே, வரவிருக்கும் இந்தோ-அமெரிக்க இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் எச்-1பி விசா தொடர்பான விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பேச்சு வார்த்தையின் போது இது பற்றிய பேச்சுக்கள் எழ வாய்ப்புள்ளது என்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.