மானியமற்ற கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.105 குறைந்தது
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும், அதற்கேற்றாற் போல் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையவில்லை. அதேநேரத்தில், மானியமற்ற சிலிண்டருக்கான விலை ரூ.105 குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைப்பினால் அறிவிக்கப்பட இருந்த சமையல் எரிவாயு விலை குறைப்பு, மானியத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பு ரூ.705 ஆக இருந்தது. இது மானியத்துடன் சேர்ந்த விலையாகும். இதில் சமையல் எரிவாயு விலை ரூ.410. மானியம் விலை ரூ.295. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது. அதாவது தற்போது மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.600 ஆக விற்கப்படுகிறது. இதில் சமையல் எரிவாயு விலை ரூ.410, மானியம் விலை ரூ.190 ஆகும். அதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 320 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனால் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்துடன் வாங்குவோர் அதே ரூ.410 கொடுத்து தான் வாங்கவேண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் போலி இணைப்புகள். அதாவது ஒரு வீட்டுக்கு இரட்டிப்பான இணைப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட இணைப்புகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வங்கி கணக்கில் பெறுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை கொண்டு மானியத்திற்கான அடிப்படை தொகையை வங்கி கணக்கில் பெற்றுள்ளனர். ஆதார் அட்டை இல்லாதவர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சியிடம் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.