ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்தும் விசாரணை -
உயர்பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு நாடுமுழுவதும் ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட அதிக தொகை குறித்து விசாரிக்க சிறப்பு புலானாய்வு குழு முடிவெடுத்துள்ளது.
டெல்லி: உயர்பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர் நாடுமுழுவதும் வங்கிகணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட அதிக தொகை பற்றி சிறப்பு புலானாய்வு குழு விசாரித்து வருகிறது. ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட அதிக தொகை குறித்து விசாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் உயர் பணமதிப்பு கொண்ட ரூ. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.
மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருந்து மாற்றினார்கள். பெரிய பண முதலைகள் பலர் தங்களிடம் இருந்த கறுப்பு பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்ய தொடங்கினார்கள்.
பல லட்சம் கோடிகள் டெபாசிட்
ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் இருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிச் சென்றனர். ஆனால் பல லட்சம் கோடி பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. ஜன் தன் வங்கிக்கணக்கில் கூட லட்சக்கணக்கில் பலரும் டெபாசிட் செய்திருந்தனர். இதெல்லாம் கணக்கில் வராத பணம் என்பது தெளிவாக தெரியவந்தது.
வருமான வரி சட்டத் திருத்த மசோதா
வங்கிக் கணக்குகளில் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. வருமானத்தை கணக்கில் காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 30 சதவிகித வரியும், 33 சதவிகித கூடுதல் வரியும், 10 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும். கணக்கில் காட்டாத வருமானத்தை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தால் 75சதவிகிதம் வரியும், 10 சதவிகித அபராதமும் விதிக்கப்பட்டும் என்று புதிய வருமானவரி சட்ட திருத்த மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளார்.
வரி விதிப்பு
இந்த சட்டத்திருத்தத்தின்படி கணக்குகளில் வராத தொகைக்கு வரி விதிக்க வரி ஆணையம் முடிவு செய்தது. இந்த வரி மட்டும் 6,000 கோடியை தாண்டிவிட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத் தலைவர் நீதிபதி அர்ஜித் பசாயத் தெரிவித்தார். இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரி விதிப்பு உயர்வு
கறுப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் 60 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இப்போது அந்த வரியை 75 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எவ்வளவு தொகை திரட்ட நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியிடமுடியாது. ஆனால் கணிசமான தொகை திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் புலனாய்வுக்குழு அறிவித்துள்ளது.
50 லட்சத்திற்கு மேல் டெபாசிட்
முதல் கட்டமாக 50 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மெயில் அனுப்பினோம். 1,092 நபர்கள் 50 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தார்கள். தங்களது வங்கிக்கணக்கிலும் மற்றவர்களின் வங்கிக்கணக்கிலும் அதிகளவில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு,1092 பேர் இன்னும் பதிலளிக்கவில்லை.
மிகப்பெரிய சவால்
ஒடிஷாவை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் 2.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார். ஓடிஷா மாநிலத்தில் இருப்பவர்கள் கூட பதில் அளித்தார்கள். ஆனால் இன்னும் பெரும்பாலானவர்கள் இதற்கு பதில் அளிக்கவில்லை. வருமான வரித்துறைக்கு இன்னும் பெரிய சவால் காத்திருக்கிறது.
ஜன் தன் டெபாசிட்கள்
பெரிய கணக்குகளை விசாரித்த பிறகு சிறிய கணக்குகளையும் அதிக தொகை டெபாசிட் செய்யப் பட்டதையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப் பட்ட அதிக தொகை குறித்தும் விசாரிக்க முடிவெடுத்திருக்கிறோம். இது கடினமான வேலை மட்டுமல்லாமல் அதிக நேரம் பிடிக்கும் வேலையும் என்றாலும் அதிகாரிகள் இதனை செய்ய தயாராக இருப்பதாகவே கூறியுள்ளனர்.