ரூபாய் நோட்டு தடையால் இந்திய பொருளாதார மந்தநிலை- எச்சரிக்கும் பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா
மத்திய அரசின் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தற்காலிக பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியதை அடுத்து
டெல்லி: உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது தற்காலிக பொருளாதார மந்த நிலைக்கு வழி வகுக்கக் கூடும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது அவர், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஏழை மக்களின் முழு ஒத்துழைப்புடனேயே நடக்க வேண்டும் என்றும் அதற்காக அவர்கள் நீண்ட நாட்கள் அதற்காக காத்திருக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருக்கவும், ஏழை மக்கள் அதிகம் சிரமப்படாமல் இருக்கவும் அவர்களிம் கஷ்டங்களை களையவும் அதிக்கப்படியான தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நீண்ட கால வளர்ச்சி
கறுப்பு பணம் மற்றும் கள்ள பணம் ஒழிப்பிற்காக உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது இத்தகைய தற்காலிக பொருளாதார மந்த நிலை தவிர்க்க முடியாது எனவும், அதே சமயம், நாம் அனைவரும் எதிர்பார்க்கும் நாட்டின் நீண்டகால வளர்ச்சி மற்றும், முன்னேற்றம் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதால் நாம் இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒன்று சேருங்கள்
அதே போல, ஏழை மக்களின் பசி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சுரண்டல் அற்ற வளமான எதிர்கால இந்தியாவை உருவாக்க அனைவரும் தேசிய அளவில் ஒன்று சேரவேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி பின்னடைவு
இதனிடையே செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினால் இந்திய பொருளாதாரம் பின்னோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாக இந்தியாவின் மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் எச்சரித்துள்ளார்.
ஜிடிபி குறையும்
தற்போது 7 சதவிகிதமாக உள்ள ஜிடிபி 2 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் மாண்டேகு சிங் அலுவாலியா. பணமதிப்பு நீக்கம் மட்டுமே மின்னணு பண பரிவர்த்தனைக்கு உகந்தது அல்ல என்றும் இந்த பொருளாதார வல்லுநர் கூறியுள்ளார்.
தவிக்கும் மக்கள்
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பினால் மக்கள் தவித்து வருகின்றனர். பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சிக்கல் 2017ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என்று எச்சரிக்கிறார் அலுவாலியா.
எச்சரிக்கும் வல்லுநர்கள்
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து மக்களின் துயரம் ஒருபக்கம் இருக்க, பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்று முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார். அதேபோல பொருளாதார வல்லுநரும், முன்னாள் திட்டக்குழு துணை தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியாவும் எச்சரித்துள்ளார்.