ரூபாய் நோட்டு தடைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது - சொல்கிறார் உர்ஜித் படேல்
உயர் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜரான உர்ஜிர் படேல் கூறியுள்ளார்.
சென்னை: நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். ஒரே நாள் இரவில் மக்கள் பணத்தை தேடி வீதிக்கு வந்தனர்.
வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மணிக்கணக்கில் கூட்டம் கூடியது. உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு கடுமையான பண பஞ்சம் ஏற்பட்டது.
70 தற்போதுதான் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரம்பு நாள் ஒன்றுக்கு 10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், வார உச்சவரம்பான 24,000ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுபோல், வணிகர்கள் நடப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் உச்சவரம்பு வாரம் 50,000ல் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது கார்டு பரிவர்த்தனை நகர் பகுதிகளில் மட்டும் கைகொடுத்தது. கிராமங்களில் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
உர்ஜித் படேல் விளக்கம்
இதற்கிடையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், பழைய ரூபாய் நோட்டுக்கு ஈடாக சுமார் 9.7 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேங்கிக் கிடக்கும் பணம்
ரிசர்வ் வங்கி நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அளித்த தகவலில், பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு ரூ.9.7 லட்சம் கோடி வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.9.1 லட்சம் கோடி மக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தது. ஆகையால், ரூ.60,000 கோடி வரையில் மக்களிடையே தேங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.
பண பரிவர்த்தனை கட்டணம்
இந்நிலையில், நீடித்து வரும் பணத்தட்டுப்பாட்டை நீக்க கிராம புறங்களில் மொபைல் வாலட் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. வணிகர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை வாரியிறைத்துள்ளன. ஆனால், கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு உள்ளிட்ட பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் டிசம்பர் 30க்கு பிறகு மீண்டும் அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு
பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து தங்களது கேள்விகளுக்கு ஜனவரி 20ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற பொது கணக்குக்குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, உர்ஜித் படேல், துணை ஆளுநர் ஆர்.காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஜனவரி 20ஆம் தேதி நாடாளுமன்ற பொது கணக்குக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பணப்புழக்கம் அதிகரிப்பு
அப்போது பேசிய உர்ஜித் படேல், "ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப் பிறகு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. எளிதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் மட்டுமே பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது. இருப்பினும் இன்னும் 2 வாரங்களில் அங்கு நிலைமை சரியாகும் என்றார்.
கட்டணம் குறையும்
அரசின் அறிவுறுத்தலின்படி, ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணத்தை குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். வங்கிகளுடனும், பேமன்ட் கேட்வே நிறுவனங்களிடமும் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
தெளிவான பதிலில்லையே
உர்ஜித் படேல் விளக்கம் அளித்தாலும், அவர் சரியான புள்ளி விபர ரீதியாக தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று பொது கணக்குக்குழு தலைவர் கே.வி. தாமஸ் கூறியுள்ளார். பொதுக்கணக்குக் குழுவின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு திணறலான பதிலையே கூறினாராம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்.