நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடி - அக்டோபரை விட குறைவுதான்
நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.97,637 கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட வசூலில் குறைவாகும்.
டெல்லி: நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 97 ஆயிரத்து 637 கோடியாக குறைந்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அக்டோபர் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையில் 69.6 லட்சம் பேர் ஜிஎஸ்டி 3ஆர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மாநில அரசுகளுக்கு ரூ.11,922 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய மாதத்தில் ரூ.1,00,710 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது.நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் ரூ.23,070 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.16,812 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.49,726 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.1.03 லட்சம் கோடியாகவும், மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூனில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலையில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட்டில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி செலுத்த ஜனவரி வரை காலக்கெடு
இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல திதிலி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வரி செலுத்துவோர் வரியை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செலுத்தலாம் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.