வங்கிகளில் கடன் வாங்கிய 4,387 பெரும் கடனாளிகள் - வராக்கடன் ரூ.9.62 லட்சம் கோடி
2018 மார்ச் மாத நிறைவில் இந்திய வங்கித் துறையின் மொத்த வராக் கடன் அளவு ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா ராஜ்யசபாவில் கூறியுள்ளார்.
டெல்லி: 2018 மார்ச் மாத நிறைவில் இந்திய வங்கித் துறையின் மொத்த வராக் கடன் அளவு ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளது. இந்திய வங்கிகளின் மொத்த வராக் கடன்களில் சுமார் 4,387 பெரும் கடனாளிகள் மட்டும் 90 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 24ஆம் தேதி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
2018 மார்ச் மாத நிறைவில் இந்திய வங்கித் துறையின் மொத்த வராக் கடன் அளவு ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளது. இது 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வெறும் ரூ.2.51 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. ரூ.10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கடன் பெற்ற சுமார் 4,387 கடனாளிகள் இணைந்து ஒட்டுமொத்த வாராக் கடன்களில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர். இவர்களின் மொத்த கடன் ரூ.8,59,532 கோடியாக உள்ளது" என்ற விவரங்களை வெளியிட்டார்.
ரூ.10 கோடிக்கு மேல் கடன் பெற்று பாக்கி வைத்துள்ள கடனாளிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்குத் தடை இருப்பதாகவும் அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, 45(இ)-ன் கீழ் வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விவரங்களை வெளியிடத் தடை விதிக்கிறது. 2017 டிசம்பர் வரையில் ரூ.2.69 லட்சம் கோடி வாராக் கடன் கொண்ட 39 பெரும் கடனாளிகள் மீது வங்கி திவால் சட்டத்தின் கீழ் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும், புதுப் படம் ரிலீசாவது போல பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் மிகப் பெரும் தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்ட செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சாதாரண நபர்களோ அல்லது விவசாயியோ கடன் கேட்டு வங்கிகளை அனுகினால், ஏதோ பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்த்துவிட்டு, அதற்கெல்லாம் உனக்கு தகுதியே கிடையாது என்று சொல்லி துரத்தி விடுவார்கள்.
கடன் வாங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் மிகச் சரியாக இருந்தாலும், ஏதாவது ஒரு நொட்டை காரணத்தை சொல்லி கடன் கிடையாது என்று துரத்தி விடுவதுண்டு. அப்படியே கடன் கொடுத்துவிட்டாலும், ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களால், கடன் தவணையையோ அல்லது வட்டியையோ கட்டத் தவறினால், கடன் வாங்கியவர்களை அடிமை போல மிகக் கீழ்த்தரமாக நடத்துவதுண்டு. காங்கிரஸ் ஆட்சியில்தான் வராக்கடன் உச்சத்தை தொட்டது என்று மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் 2018 மார்ச் மாத நிறைவில் இந்திய வங்கித் துறையின் மொத்த வராக் கடன் அளவு ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளது மத்திய அமைச்சர் ராஜ்யசபாவில் கூறியுள்ளார்.
பினாமி சொத்துக்கள் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா, ஜூன் 30, 2018 நிலவரப்படி, ரூ.4,300 கோடி மதிப்புள்ள 1,600க்கு மேலான பினாமி பரிவர்த்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், பினாமி சொத்துகளைக் கண்டறிவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இந்தியா முழுவதும் 24 அர்ப்பணிக்கப்பட்ட பினாமி தடுப்பு அமைப்புகளை வருமான வரித் துறை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஷிவ் பிரதாப் சுக்லா அளித்த மற்றொரு பதிலில், 2017-18ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.27,561 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2016-17ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.24,541 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஈட்டும் ஒட்டுமொத்த வருவாய்க்கும் வரி வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டம் 1988, பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம் 2016ஆகத் திருத்தம் செய்யப்பட்டு, பினாமி சொத்துக்கள் எந்த வகையில் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும் பினாமி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.