நிலையாக நிற்கும் பெட்ரோல் டீசல் விலை - கர்நாடகா தேர்தல் காரணமா?
பெட்ரோல்,டீசல் விலை கடந்த 24ஆம் தேதி முதல் மாறாமல் இருந்து வருகிறது.
டெல்லி: தினசரி உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கடந்த 6 நாட்களாக மாறாமல் இருந்து வருவது வரும் கர்நாடகா மாநில தேர்தல் பயம்தான் காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.
மத்திய அரசின் வசம் இருந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அந்த அந்த எண்ணை நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. அன்றிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான விலையை தங்கள் விருப்பம் போல எண்ணை நிறவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தன.
2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் அட்சியில் அமர்ந்தது. அன்று முதல் எண்ணை நிறவனங்கள் மத்திய அரசிடம், 15 நாட்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைத்து வருவது தங்களுக்கு கடுமையான நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக ஒப்பாரி வைத்தன.
தினசரி விலை நிர்ணயம்
மத்திய அரசும் எண்ணை நிறுவனங்களின் பரிதாப நிலையை தீவிரமாக (!) அலசி ஆராய்ந்து(?) 15 நாட்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைக்கும் முறையை மாற்றி தினசரி விலையை நிர்ணயம் செய்து கொள்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்துக் கொள்ளும் முறை அமலுக்கு வந்தது.
பெட்ரோல் டீசல் விலை
கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.48 ரூபாய்க்கும், டீசல் 54.93 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. தற்போது 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.63 ரூபாய்க்கும், டீசல் 65.93 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரமானது மாறாமல் இருந்து வருகிறது.
உச்சத்தை தொட்ட விலை உயர்வு
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. இதுவே வரலாறு காணாத உயர்வாகும். இதை நோக்கி பெட்ரோல் விலை வேகமாக உயரத் தொடங்கியது. டீசல் விலை முதல் முறையாக ரூ.70ஐ நெருங்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 1ம் தேதி டீசல் விலை ரூ.62.90 ஆக விற்பனை செய்யப்பட்டது.
விலையை குறைக்க மறுப்பு
மத்திய அரசின் வசம் உள்ள எண்ணை நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து பல ஆண்டுகளாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை சரிந்த போதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைக்க மறுத்து வந்தன. ஒருவேலை விலையை குறைத்தாலும் 0.02 பைசா அல்லது 0.03 பைசா என்ற கணக்கிலேயே குறைத்து வந்தன. விலையை ஏற்றினால் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் என்று ஏற்றி வந்தன.
கலால் வரியை குறைக்க மறுப்பு
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு எதற்கும் அசைந்து கொடுக்காமல், எண்ணை நிறுவனங்களின் பக்கம் நின்று கொண்டு, அவர்களின் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
வாட் வரியை குறைக்க வலியுறுத்தல்
பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியையாவது குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக எதையும் காதில் கேட்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதற்கு மாறாக மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அனைத்து மாநிலங்களும் குறைக்க வேண்டும் என்று சொல்லி தப்பித்து வருகிறது.
விலையை குறைக்க மறுப்பு
மத்திய நிதித் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியாவும், பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சுபாஷ் கர்க்கும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால், தற்போதைக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்கு முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர்.
ரூபாய் மதிப்பு சரிவு
சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வார காலத்தில் கச்சா எண்ணையில் விலை ஒரு பேரலுக்கு 2 டாலர் வரை உயர்ந்து விட்டது. ஆனால், எண்ணை நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் பழைய விலையிலே விற்பனை செய்து வருகின்றன. கூடவே அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த சில நாட்களில் 65.41 ரூபாயில் இருந்து 66.14 ரூபாயாக உயர்ந்து விட்டது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம்
கச்சா எண்ணை விலை உயர்ந்து வந்தாலும் எண்ணை நிறுவனங்கள் விலையை ஏற்றாமல் இருந்து வருவது, பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைப் பற்றிய எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட எண்ணை நிறவன அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். விலை நிர்ணயம் பற்றிய எந்த ஒரு விபரத்தையும் விவாதிக்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பெட்ரோலியத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியபோது, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வது சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை. இதில் நாங்கள் தலையிட முடியாது என்று காரணம் சொல்லி தப்பித்து விட்டனர்.
தேர்தல் தோல்வி பயம்
பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஒரு வார காலமாக மாற்றியமைக்காமல் இருந்து வருவதற்கு உண்மையான காரணம், வரும் 12ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலே. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது கர்நாடகா சட்ட சபை தேர்தலில் எதிரொலித்து, கடும் விளைவே ஏற்படுத்தும் என்பதாலேயே விலையை ஏற்றாமல் இருந்து வருகின்றன என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேர்தல் எதிரொலி
இதற்கு முன்பும், குஜராத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல், தேர்தல் முடிந்த பின்புதான் விலையை உயர்த்தினர். அதுபோன்ற உத்தியைத்தான், தற்போது கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்போகின்றனர். இவர்களின் ஏமாற்று வித்தை கர்நாடக தேர்தலில் எதிரொலிக்குமா இல்லையா என்பது இன்னும் 2 வாரத்தில் தெரிந்துவிடப்போகிறது. அதுவரையில் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.