பட்ஜெட் 2018: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நீக்குங்க... பெட்ரோலிய அமைச்சகம் கோரிக்கை
2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியை நீக்கி அருண்ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
மும்பை: உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விதிமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நீக்க வேண்டும் நிதிஅமைச்சகத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை எண்ணை நிறுவனங்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வந்ததை கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி முதல் சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரத்தைப் பொறுத்து தினசரி மாற்றி அமைத்துக்கொள்ளும் உரிமையை மத்திய அரசு எண்ணை நிறுவனங்களுக்கு அளித்தது.
அன்று முதல் தினசரி சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரத்தைப் பொறுத்து தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலையை மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஜூலை 1ம் தேதி அன்று தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 63.09 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 53.33 ரூபாய்க்கும் விற்று வந்தது.
எண்ணை நிறுவனங்களின் தினசரி விலை மாற்ற நடவடிக்கையினால் ராக்கெட் வேகத்தில் ஏற ஆரம்பித்த பெட்ரோலும் டீசலும் இடையில் நிற்காமல் உச்சத்திற்கு போய்க்கொண்டே இருக்கிறது.
விலை ஏற்றம்
கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள், தினசரி கச்சா எண்ணை உற்பத்தியை கணிசமாக குறைத்துவிட்டதால், இதன் விலை சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதுவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணமாகும். கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசலின் விலை உயர்வு சாமானிய மக்களை பாதித்துள்ளது.
பெட்ரோல் விலை குறையும்
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டபோது, பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவந்தால் இவ்விரண்டின் விலையும் கணிசமாக குறையும் என்று நம்பிக்கையோடு இருந்தனர்.
பெட்ரோல், டீசல்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் ஒவ்வொரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்து பேட்டி அளிக்கும்போது விரைவில் பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படும் என்று நம்பிக்கை அளித்தார். வரும் 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டிலாவது பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியை நீக்கி அறிவிப்பு வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரி
பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படுமானால், அவை உச்சபட்ச வரியான 28 சதவிகிமாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில் நிறுவனங்களும் தங்களின் உற்பத்திக்கு கொள்முதல் செய்த பெட்ரோல், டீசல் தொடர்பான மூலப்பொருட்களுக்கு உள்ளீட்டு பயன்பாட்டு வரியையும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
பெட்ரோல் விலை குறையும்
கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியை 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இருந்தாலும் இவை இரண்டும் பிரேக் பிடிக்காத வண்டி போல் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முழுவதும் நீக்கிவிட்டால் இவ்விரண்டும் 50 ரூபாய்க்கு கீழே வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா?
இதுபற்றி பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில், பெட்ரோலிய் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால் உள்ளீட்டு வரிப் பயன்பாட்டை பெறமுடியும். இதனால் இவ்விரண்டின் விலையும் கணிசமாக குறையும். ஆகவே நிதி அமைச்சகம் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியில் 28 சதவிகித வரி விதிப்பில் கொண்டுவரும், என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
எண்ணெய் நிறுவனங்கள் கவலை
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிதித்துறை தலைமை அதிகாரி ஜே.ராமசாமி கூறுகையில், "ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் உள்ளீட்டு வரிப் பயன்பாட்டை பெற முடியாததால் ஒரு காலாண்டிற்கு 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.