அமெரிக்கர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் இந்தியர்கள் - காரணம் என்ன தெரியுமா?
வேலை மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக இந்தியர்களின் மன அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சென்னை: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர் பற்றிய "வெல் பீயிங் சர்வே" என்ற ஆய்வை நடத்தியது. பிரேசில், இந்தோனிஷியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இந்தியா ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில், 'வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் மன அழுத்தம் மிக அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 89% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சர்வதேச சராசரியை விட அதிகமாகும். சர்வதேச சராசரியே 86 விழுக்காடாகத்தான் உள்ளது. மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது வேலையும், அவர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகளும்தான்' என்று கூறப்பட்டுள்ளது.
23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,467 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 20 நகரங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதில் பங்கெடுத்தவர்களில் 1000 பேர் வரை 25 வயதைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களே மற்ற வயதினரைக் காட்டிலும் வேலை மற்றும் நிதி பிரச்சினைகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 95 சதவிகிதத்தினர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்கவும் இயலவில்லை என்று கூறியுள்ளனர். அதேபோல குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதும் குறைந்து வருவதாக இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனம் ஆய்வு நடத்திய நான்கு வருடங்களிலும் இந்தியா மோசமான இடத்தையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு பிடித்தப்படி இருக்காமல் போவதும், பண பிரச்னை, வேலை சுமை, சமூக பிரச்னை இதுவே மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வானது தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிக்னா நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆய்வு ஆன்லைன் வழியாக பிப்ரவரி முதல் மார்ச் வரையில் நடத்தப்பட்டது.
அந்த ஆய்வு மட்டும் அதிர்ச்சி தரக்கூடியதில்லை. இந்தியாவில் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் மன அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களைக் காண முடிகிறது. மன அழுத்தம் பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. 2011ஆம் ஆண்டில் 100 பேரில் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015ஆம் ஆண்டில் 100க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை காரணமாக கூறலாம். மத்திய - மாநில அரசுகள் இதைக் கவனத்தில் கொண்டு, மன அழுத்த நோயாளிகள் எதிர்கொள்ளும் மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சினைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை தொடங்க வேண்டும்.