ஒரே தேசம் ஒரே பெர்மிட்: ஜிஎஸ்டிக்கு தம்பி... வாகனப் போக்குவரத்தில் புரட்சி
ஜிஎஸ்டி வரி முறையில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்களும் தொழில்நுட்ப கோளாறுகளும் இருந்துவருகின்றது. இந்த குழப்பங்களே இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கும்போது மத்திய அரசு அடுத்த அதிரடியை கொண்டுவரப்போகிறது.
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரிமுறையை தொடர்ந்து தற்போது வாகனப் போக்குவரத்திலும் ஒரே தேசம் ஒரே பெர்மிட் என்ற புதுமையை கொண்டுவர நாடாளுமன்ற குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஒரே தேசம் ஒரே வரி முறை என்ற முழக்கத்தை தொடர்ந்து வாட் வரி முறை ஒழிக்கப்பட்டு சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டுவருகிறது.
ஜிஎஸ்டி வரி முறையில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்களும் தொழில்நுட்ப கோளாறுகளும் இருந்துவருகின்றது. இந்த குழப்பங்களே இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கும்போது மத்திய அரசு அடுத்த அதிரடியை கொண்டுவரப்போகிறது.
பெர்மிட் கட்டணம்
வாகனப்போக்குவரத்து துறையில் தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும், தேசிய அளவிலும், வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தனித்தனியாக அனுமதிக் கட்டணம் (Permit Fee) தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. அதாவது மாநிலங்களுக்குள் வாகனங்கள் இயக்குவதற்கு மாநில பெர்மிட் கட்டணம் என்றும் , அதைத் தாண்டி பிற மாநிலங்களுக்கு இயக்குவதற்கு தேசிய பெர்மிட் கட்டணம் என்று வெவ்வேறுவிதமாக அனுமதிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை
உதாரணமாக, ஒரு பேருந்து தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழகத்தை தாண்டி கேரளா, ஆந்திரா, தெலுங்கான மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இயக்குவதற்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 42 லட்சம் ரூபாய் அனுமதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையை நீக்கிவிட்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘ஒரே தேசம் ஒரே பெர்மிட்' என்ற அனுமதிக் கட்டணமுறையை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
சரக்கு கட்டணமும் குறையும்
நாடு முழுவதும் ஒரே பெர்மிட் முறையை கொண்டுவந்தால், வாகன உரிமக் கட்டணம் (Permit Fee) கணிசமாகக் குறையும். இதனால் சரக்கு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டு, வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது, அதுபோலவே, வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்குபவர்களுக்கும் பெரும் பயனளிக்கும் என்றும் கருதப்படுகிறது. கூடவே பேருந்து கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஒரே பெர்மிட்
இந்த உரிமக் கட்டண முறையில் சிக்கல்கள் உள்ளதால் இவற்றை முற்றிலும் நீக்கிவிட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பெர்மிட் முறையை கொண்டுவரவேண்டும் என்று பல்வேறு போக்குவரத்து அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து மத்திய தரைவழிப்போக்குவரத்து துறை அமைச்சகமும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பெர்மிட் முறையை கொண்டுவர முயற்சித்து வருகிறது.
புதிய திருத்தங்கள்
இதனையடுத்து மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டுவர ஆய்வு செய்வதற்காக வினய்.பி.சகஸ்ரபுத்தே தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது பல முக்கிய பரிந்துரைகளை மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ளது.
சட்டத்திருத்தம்
மாநில மற்றும் தேசிய பெர்மிட் முறைக்க பதிலாக நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்திற்கு ஒரே வரி முறை, ஒரே பெர்மிட் முறையை அமல்படுத்த வேண்டும். அதற்கான சட்ட திருத்தம் செய்யவேண்டும்.
இந்த சட்ட திருத்தமானது அந்தந்த மாநிலங்களின் மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் அதிகாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. அதற்கு மாறாக அவர்களின் பொறுப்புணர்வையும் வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்க செய்யும் சுமூகமான சூழலை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.