கண்ணீர் விட வைக்கும் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 100... தக்காளி கிலோ ரூ. 7தான்!
சின்ன வெங்காயத்தின் பெயரை கேட்டால் கண்ணீர் விட ஆரம்பித்துள்ளனர் இல்லத்தரசிகள் காரணம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது வறட்சி நிலவுவதால் காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வெங்காயத்தை உறிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தினமும் காய்கறி விலைக்கு ஏற்ப ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தில் ஒட்டன்சத்திரம், ஊட்டி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, திண்டுக்கல், தேனி மற்றும் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வருகின்றன.
தற்போது தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் வறட்சி நிலவுவதால், அப்பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ருசியான சின்ன வெங்காயம்
தமிழக சமையலில் சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றிர்க்கு தனி இடமுண்டு. சுவைக்காகவே அதிக அளவில் சின்ன வெங்காயத்தை கண்ணில் நீர் வர உறித்து சமையல் செய்வார்கள். இல்லத்தரசிகளின் பட்ஜெட்டில் அதிகம் துண்டு விழ வைத்துள்ளது, சின்ன வெங்காயம், காய்கறிகளின் விலை உயர்வு.
சதமடித்த சின்ன வெங்காயம்
சென்னையில் கடந்த 6 மாதங்களில் அதிகபட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மொத்த விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கால் கிலோ சின்ன வெங்காயம் ரூ.25க்கும், ஒரு கிலோ ரூ.100 வரையிலும் விற்பனையானது.
வரத்துகுறைவு
இதற்கு வரத்து குறைவே காரணம் என்று கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் தாராபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கைகொடுக்கும் பெரிய வெங்காயம்
சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்ததால் வழக்கமாக அதிகளவில் வாங்கும் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தற்போது குறைந்த அளவிலான சின்ன வெங்காயத்தையே வாங்கிச்செல்கிறார்கள். சின்ன வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயம் கிலோ 18 ரூபாய்க்கு விற்பனையாகிறது எனவே வீட்டிற்கு வாங்குபவர்கள் பெரிய வெங்காயத்தை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
காய்கறிகள் விலை உயர்வு
கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் கிலோ ரூ.110க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.85க்கும், கேரட் ரூ.60க்கும், அவரை மற்றும் பச்சை மிளகாய் தலா ரூ.50க்கும், முருங்கைக் காய், பீட்ரூட் தலா ரூ.40க்கும் விற்பனையாகிறது.
தக்காளி விலை குறைவு
தக்காளிதான் விலை உச்சத்தை தொடும் ஆனால் தற்போது தக்காளி ரூ.7க்கும், உருளைக்கிழங்கு ரூ.13க்கும் கத்தரிக்காய், பாகற்காய் தலா ரூ.30க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால் விலை அதிகமில்லாத காய்கறிகளையே பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
உறிக்காமலேயே கண்ணீர்
சின்ன வெங்காயம் உறித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால் சின்ன வெங்காயத்தின் பெயரைக் கேட்டாலே இப்போது கண்ணீர் வருகிறது. காரணம் விலையேற்றம்தான். விலை குறைந்தால் மட்டுமே இனி சாம்பாரில் சின்ன வெங்காயத்தை கண்ணில் பார்க்க முடியும், அதுவரைக்கும் பெரியவெங்காயத்தை சாப்பிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதுதான்.
வறட்சியால் விலை உயர்வு
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் நிலவும் வறட்சியால் வரத்து குறைந்து, விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் ஜூன் மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என்று காய்கறி விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.