பசு சாணம், விவசாய கழிவுகளை ஆன்லைனில் விற்கலாம் -பிரதமர் மோடி
மத்திய அரசு புதிதாக தொடங்கிய கோபர் தன் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பசுவின் சாணம், விவசாயக் கழிவுகளை இணையதளம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: பசுவின் சாணத்தையும், விவசாய கழிவுப் பொருட்களையும் இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு வசதியாக புதிய வலைதளம் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மத்திய அரசு புதிதாக தொடங்கிய கோபர் தன் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பசுவின் சாணம், விவசாயக் கழிவுகள் மூலம் பயோ கியாஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தும் திட்டத்தின் மூலம் சுத்தமான எரி சக்தி கிடைக்கும்.
கோபர்-தன் திட்டம் என்பது கிராமங்களை சுத்தம் செய்வது மட்டுமல்ல, கழிவுகளை மறுசுழற்சி செய்து அவற்றின் மூலம் எப்படி உபரி வருமானம் பெறுவதும் ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மோடியின் மன் கி பாத்
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் அன்றாட நிகழ்வுகளை நேரடியாக பேசம் வகையில் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல் 41வது முறையாக இன்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும்போது விவசாயக் கழிவுகள், சமையலறைக் கழிவுகளைக் கொண்டு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பயோ கேஸ்
2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை விவசாயத்திற்கும் (Galvanizing Organic Bio Agro Resources-GOBAR DHAN) முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், அதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், அதன்மூலம் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும், போக்குவரத்து மற்றும் இயற்கை எரிவாயு விற்பனைக்கும் என்ன என்ன சாத்தியக்கூறுகள் என்னவென்று ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை செயல்படுத்துவதற்கான அறிவிப்பாகவே பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி இருந்தது.
பெண்களின் முன்னேற்றம்
தன்னுடைய உரையில் நாட்டு மக்கள் அனைவரும், தங்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த பழகிக்கொள்ளவேண்டியது அவசியமாகும். இவற்றை பெண்களின் முன்னேற்றத்திற்கும், சமுதாய பாதுகாப்பிற்கும், விவசாயக் கழிவுகளை எப்படி பணமாக மாற்றுவது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இயற்கை விவசாய கழிவுகள்
நாட்டில் முப்பது கோடிக்கும் அதிகமான கால்நடைகள் உள்ள. அவை ஒவ்வொரு நாளும் சுமார் முன்னூறு கோடி அளவிலான சாணக் கழிவுகளை வெளியேற்றுகின்றன. அவற்றை நாம் பயனுள்ள வகையில் பயன்படுத்த பழகிக்கொள்ளவேண்டும். மேலும் அவற்றை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை கழிவுகளையும், சமையல் கழிவு மற்றும் பசுவின் கழிவுகளையும் இயற்கை எரிவாயுவாக மாற்றும் வழிவகையை கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். கோபர்-தன் திட்டம் என்பது கிராமங்களை சுத்தம் செய்வது மட்டுமல்ல, கழிவுகளை மறுசுழற்சி செய்து அவற்றின் மூலம் எப்படி உபரி வருமானம் பெறுவதும் ஆகும்.
கலாச்சாரத்தை போற்றுவோம்
நம் நாட்டின் பெண்கள் தற்போது தங்களின் திறமையையே பெரிதும் நம்பி உள்ளனர். அந்த நம்பிக்கையானது அவர்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதுடன் நமது நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும். ஏனென்றால், நம்நாடு பண்டைய கலாச்சாரத்திற்கும் பெண்களுக்கும் எப்போதும் உயரிய மதிப்பளித்து வருகின்றது. அந்த கலாச்சாரத்தை அடியொற்றியே, தற்போது பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று குறிப்பிட்டார்.